தெற்காசியாவில் உயரமான தாமரைக் கோபுரத்தை, ஜனாதிபதி திறந்து வைத்தார்

🕔 September 16, 2019

– பாறுக் ஷிஹான் –

தெற்காசியாவில் மிகவும் உயரமான கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தில் 1878 கோடி ரூபாய்) செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் அலைவரிசை ஒலி – ஒளிபரப்பினை எண்மான அடிப்படையில் தாமரைக் கோபுரத்திலிருந்து மேற்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர். இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 03ம் மற்றும் 04ம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

கொழும்பு  டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத் தாமரை  கோபுரத்தின் நினைவாக,  இலங்கை தபால் திணைக்களத்தினால் முத்திரை மற்றும் தபால் உறை வெளியிடும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. 45.00 ரூபா பெறுமதியில் வெளியிடப்பட்டுள்ள இந்த முத்திரையை, கலைஞர் பசுபிட்டியேஜ் இசுரு சதுரங்கா உருவாக்கியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தாமரைத் கோபுரத்தை உத்தியோகபூர்வமானத் திறந்து வைத்ததோடு, தாமரைக் கோபுரத்துக்கான இணையத்தளத்தினையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்டோரும் பங்குபற்றினர்.

சீனாவின் எக்சிம் வங்கி வழங்கிய கடன் உதவியுடன் இக்கோபுரத்தை அமைக்கும் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்