மன்னார் மாவட்டத்திலே எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்

🕔 September 13, 2019

கிராமங்களின் வளர்ச்சியும், பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்தந்த கிராமங்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் 75வது வருட பவளவிழாவும் நூர்தீன் மஷூர் பார்வையாளர் அரங்கு அங்குரார்ப்பணமும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் றிஷாட் விசேட அதிதியாக கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் முஹமட் ஷாபி தலைமையிலான இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார்.

அமைச்சர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டத்திலே எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது. இங்கு அமைந்துள்ள எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பலர், நாடளாவிய ரீதியில் உயர் நிலையில் இருக்கின்றனர். இலங்கையில் எந்தப்பாகத்திற்கு சென்றாலும் அங்கு உயர்பதவிகளில் பணிபுரியும் பலர், தாங்கள் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் எனப் பெருமை கொள்வதை கேட்டிருக்கின்றேன்.

நமது சமூகத்துக்கும் நாட்டுக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மர்ஹூம் பேராசியர் ஹஸ்புல்லாஹ், இந்த கிராமத்தில் பிறந்தவர். அவர் கல்வித்துறையிலே ஓர் அரிய பொக்கிஷமாக போற்றப்பட்ட சிறந்த கல்விமான். அதேபோன்று வைத்திய நிபுணர்களான இனாயத்துல்லாஹ், எஸ்.எப்.எல்.அக்பர் உட்பட வெளிநாட்டு சேவைகள், நிர்வாக, பொறியியல்,சுங்க, கணக்காளர் சேவைகள், சட்டத்துறை மற்றும் மருத்துவத்துறை உட்பட இன்னும் பல்துறை சார்ந்த அநேகர் இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்நிலையில் இருப்பது இந்த மண்ணுக்குகிடைத்த கீர்த்தியே.

இந்த ஊரில் பிறந்து இந்த பாடசாலையில் கல்விகற்ற உங்கள் மண்ணின் மைந்தனான மர்ஹூம் நூர்தீன் மஷூர், கல்வி வளர்ச்சிக்காக செய்த தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் நாம் நினைத்துப்பார்க்கிறோம். அது மாத்திரமின்றி மன்னார் மாவட்டத்தில் பேதங்கள் இன்றி அன்னார் பணியாற்றியிருக்கிறார். அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர், சூசைதாசன் ஆகியவர்களும் இந்த பாடசாலையில் கல்விகற்று உயர்நிலைக்கு வந்தவர்களே.

மட்டுமின்றி இந்த ஊரையும், இந்த பாடசாலையும் முன்னேற்றுவதற்காக உழைத்த பலர் இன்று மாரணித்துவிட்டனர். அவர்களின் தியாகங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் தூய்மையான சேவைகளுக்கும் இறைவன் நற்கூலி வழங்க பிரார்த்திக்கின்றேன்.

பிரதமருடன் இந்த பாடசாலைக்கு இன்று விஜயம் செய்தபோது இந்த கல்லூரியின் சாதனைகள் மற்றும் எருக்கலம்பிட்டி கிராமத்தின் தொன்மைபற்றி அவரிடம் எடுத்துக் கூறினேன். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் கட்டப்பட்டு, தற்போது உடைந்துகிடக்கும் இந்த பாடசாலையின் கட்டடத்தை மீளக்கட்டியெழுப்பி தருவதாக பிரதமர் உறுதியளித்தார்.

மன்னார் மாவட்டத்திலே ஏனைய கிராமங்களுடன் ஒப்பிடும்போது எருக்கலம்பிட்டி மக்கள் கல்விக்காக தங்களை அர்ப்பணிப்பவர்கள். கட்சி, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால், கிராமத்தின் முன்னேற்றத்தில் ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயற்படுபவர்கள். அவர்களின் அக்கறையையும் அயராத உழைப்பையும் நான் மெச்சுகின்றேன். அதேபோன்று பழைய மாணவர்கள் இந்த ஊரின் வளர்ச்சிக்காகவும் பாடசாலையின் உயர்வுக்காகவும் இரவுபகலாக உழைத்துவருகின்றனர்

வடமாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களிலேயே பெரிய கிராமமாக திகழும் எருக்கலம்பிட்டி ஏனைய கிராமங்களுக்கு முன்னுதாரணமாகவும் ஒற்றுமையின் சிகரமாகவும் விளங்குகின்றது.

இடப்பெயர்வினால் இந்த பாடசாலை உட்பட பல பாடசாலைகள் மூடப்பட்டு கிடந்த உண்மையை இப்போது நினைக்கவேண்டியுள்ளது. சமாதானம் ஏற்பட்ட பின்னர் படிப்படியாக இயல்புநிலை ஏற்பட்ட போது, குறைவான மாணவர்களுடன் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

இடப்பெயர்வுக்கு பின்னர் இந்த கிராமமக்கள் புத்தளம் நாகவில்லுவில் வாழ்ந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மர்ஹூம் மஷூர் உருவாக்கிய இந்த நாகவில்லு கிராமத்தில் வாழ்கின்ற எருக்கலம்பிட்டி மக்களும், இந்த விழாவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி தருகின்றது” என்றார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது. பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் நியாஸ், பழைய மாணவர் சங்க செயலாளர் லுக்மான், வலயக் கல்விப் பணிப்பாளர் பிரட்லி, பிரதேசபை தவிசாளர்களான முஜாஹிர், செல்லத்தம்பு, சுபியான் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான், நியாஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்