காத்தான்குடி அனீக்; தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை

🕔 September 9, 2019

– மப்றூக் –

தைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக, தனது கால் ஒன்றினை இழந்த காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான தேசிய பரா மெய்வல்லுநர் விளையட்டுப் போட்டியில் 03 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் அனீக். 2018ஆம் ஆண்டு இவர் தனது இடது காலினை இழந்தார். உதைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட உபாதை, புற்று நோயாக மாறியதன் காரணமாக அவரின் காலினை அகற்ற வேண்டியேற்பட்டது.

தனது 10 வயதில் தாயையும், 16 வயதில் தந்தையையும் இழந்த அனீக், தற்போது தனது மாமாவுடன் (தாயின் தம்பி) வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயதில் தம்பியொருவரும் உள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு, 03 தங்கப் பதக்கங்களை வென்று, அனீக் சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி, கடந்த 05 மற்றும் 06ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அனீக்; 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் கலந்து கொண்டு, அனைத்திலும் முதலாம் இடங்களைப் பெற்று தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளார்.

தேசிய பராலிம்பிக் குழு ஏற்பாடு செய்திருந்த – மேற்படி தேசிய பரா மெய்வல்லுநர் தடகள மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 190க்கும் மேற்பட்ட சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இவற்றில் சுமார் 800 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 18 வயதுக்குக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் கலந்து கொண்ட அனீக், 03 தங்கங்களை வென்றுள்ளார்.

வாழ்க்கையில் சோதனைகளையும் கடினமான நெருக்கடிகளையும் சந்தித்துக்குக் கொண்டே, இந்த சாதனையைப் புரிந்துள்ள அனீக் உடன் நாம் பேசினோம்.

”நான் பாவித்துக் கொண்டிருந்த மாற்றுக் கால் ஒரு  தடவை உடைந்து விட்டது. அதனையடுத்து மருத்துவர் ஒருவரை காத்தான்குடியில் சந்தித்தேன். அப்போதுதான் விளையாட்டில் எனக்குள்ள ஆர்வம் பற்றி அவர் அறிந்தார். அதனையடுத்து தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை, அந்த மருத்துவர்தான் உரிய தரப்பினருடன் பேசி பெற்றுத் தந்தார்” என்றார் அனீக்.

விளையாட்டு மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக, விளையாட்டுப் பயிற்சிகளில் அனீக் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார். அவருக்கென்று பயிற்சியாளர்கள் எவருமில்லை. சுய பயிற்சியின் ஊடாகவே, இவர் இந்த வெற்றியினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கென்று ‘பிளேட் ஃபுட்’ (Blade foot) எனும் மாற்றுக் கால்கள் உள்ளன. அதன் விலை சுமார் 15 லட்சமாகும். எனது பொருளாதார நிலையில் அந்த வகை காலினை என்னால் வாங்க முடியாது. எனவே, நான் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் சாதாரண காலினைக் கொண்டுதான் தேசிய பரா விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றினேன். ‘பிளேட் ஃபுட்’ (Blade foot) இருந்தால், எனது ஓட்ட வேகத்தையும், நீளம் பாயும் தூரத்தினையும் இன்னும் அதிகரிக்க முடியும்” என்றும் அனீக் கூறினார்.

துபாயில் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச பரா மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளாகவும், தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத் திறமைகளுக்கு மறுபுறமாக, தனது கல்வியிலும் அனீக் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். வரக்காபொல பிரதேசத்திலுள்ள தனியார் பாடசாலையொன்றில், ஆங்கில மொழி மூலம் இவர் உயர்தரத்தில் கற்று வருகின்றார்.

‘எனக்கு ஏற்பட்ட எந்தவொரு இழப்பும், எனது திறமைகளுக்குத் தடையாக அமைந்து விடவில்லை’ என்று சொல்வது போல், தனக்குக் கிடைத்த மூன்று தங்கப் பதக்கங்களையும் கழுத்தில் அணிந்து கொண்டு, புன்னகைத்து நிற்கிறார் அனீக். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்