கோட்டாவைக் கண்டு பயப்பட வேண்டாம்: பஸில் ராஜபக்ச தெரிவிப்பு

🕔 August 8, 2019

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கின்றேன். ஆனாலும் திறமையான நிர்வாகத் திறன் கொண்ட, பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார்” என்று, என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

“கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டுள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கினால் அவரைக் கண்டு எவரும் அச்சப்படத் தேவையில்லை” எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

‘கடந்த காலங்களில் விட்ட தவறுகள், குறைபாடுகளைச் சீர்செய்து நாட்டைப் பாதுகாத்து புதிய பாதையில் செல்ல வேண்டிய நேரம் எழுந்துவிட்டது. 

எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாநாட்டுக்கு வருமாறு எதிர்க்கட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்களுக்கு ஆதரவை வழங்குவது குறித்து பேச்சு நடத்தப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஒன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரின் வழிகாட்டலின் கீழ் ஆட்சி முன்னெடுக்கப்படும்.

வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெறவில்லை. இந்த நிலையில் வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளைச் சேர்ந்த பல கட்சிகள் எங்களுடன் உள்ளன. அவர்களுடன் இணைந்து பேசி ஆட்சியை அமைப்போம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுடன் நாங்கள் எந்தத் தொடர்பையும் வைக்கமாட்டோம். ஆனால், என் மீதும் வீண் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வெள்ளை வேனில் நீதிமன்றம் கொண்டு சென்றனர். நாம் யோசித்து முடிவெடுப்போம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்தால் வெற்றிபெறுவோம் என்றும் இல்லை; தோல்வியடைவோம் என்றும் இல்லை. ஆனால், எல்லாக் கட்சிகளையும் இணைத்துப் போட்டியிட வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதால் மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ அல்லது எம்.பி. பதவியோ இல்லாமல் போகுமானால் அதைப்பற்றி எமக்குக் கவலையில்லை. மஹிந்த எப்போதும் மக்கள் மனதில் உள்ளார். அவர் மக்கள் தலைவர்.

சர்வதேச ரீதியாக நாங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் செய்யமாட்டோம். உலக நாடுகள் பலவற்றுடன் ராஜதந்திர ரீதியில் நாங்கள் நெருங்கிச் செயற்படுகின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்