கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன் வீசிய 300 ‘குண்டு’

🕔 July 30, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரசியலுக்காக பெரிய மனிதர்கள் கூட தரம் தாழ்ந்து போவது கவலைக்குரியது. சாக்கடை அரசியலுக்குள் படித்த மனிதர்கள் இறங்கும் போது, அவர்கள் அதனை சுத்தப்படுத்துவார்கள் என்றுதான் பலரும் நம்புகின்றனர். ஆனால், படித்தவர்களும் தங்கள் பங்குக்கு சாக்கடையைக் குழப்பி விட்டுக் கொண்டிருப்பதைக் காண்கையில் ஏமாற்றமாக உள்ளது. இனவாதத்தைக் கையில் எடுக்காமல் அரசியல் செய்ய முடியாது என்று படித்தவர்களே நினைப்பது, எத்தனை பெரிய அபத்தம்.

கிழக்கு மாகாணத்தில் தமிர்களின் 300 கிராமங்கள் – முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, ஓய்வுபெற்ற நீதியரசரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். தனது கட்சிக் காரியாலயத்தை மட்டக்களப்பில் திறந்து வைப்பதற்காக வந்திருந்த போதே, அவர் இதனைக் கூறினார்.

அத்தோடு நின்று விடாமல், கிழக்கு மாகாணத்தில் 09 ஆயிரம் தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்தத் தகவலை அத்துரலியே ரத்ன தேரர் தன்னிடம் கூறியதாகவும் இதன்போது இன்னொரு குண்டையும் விக்னேஸ்வரன் தூக்கிப் போட்டிருந்தார்.

உண்மையாகவே இவை அதிர்ச்சி தரும் விடயங்களாகும். ஒரு சமூகத்தின் வசமிருந்த 300 கிராமங்களை, இன்னொரு சமூகம் பறித்தெடுப்பதென்பது பெரும் அநீதியாகும். அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நியாயம் பெற்றுக் கொடுத்தல் அவசியமாகும்.

ஆனால், விக்னேஸ்வரன் கூறிய அந்தக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை தொடர்பில்தான் சிக்கல் உள்ளது.

ஒரு குற்றச்சாட்டினை முன்வைக்கின்றவர், அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களையும் தன் கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும். அதுவும் இவ்வாறு ஒரு சமூகத்தின் மீது இப்படியொரு பாரதூரமான குற்றச்சாட்டை எழுந்தமானமாக வாய்க்கு வந்தபடி அடித்து விட முடியாது.

விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் அவர் வசம் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். வீரகேசரி பத்திரிகையில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த தொடர் கட்டுரையொன்றிலிருந்து இந்தத் தகவல்களை தான் பெற்றுக் கொண்டதாக அவர் இதன்போது நம்மிடம் கூறினார். மேலும், மக்களும் தம்மிடம் இவ்வாறான குற்றச்சாட்டினை கூறியதாகவும், அதனையே தான் வெளிப்படுத்தியதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதேவேளை, ‘ஆதாரம் தேவையாயின் நீங்கள்தான் தேடிப்பார்க்க வேண்டும்’ என்றும் அவர் விடையளித்தார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஏற்கனவே முறுகிக் கொண்டுதான் உள்ளனர். ஆங்காங்கே முட்டி மோதுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. நல்லிணக்கத்தை விரும்பும் இரண்டு சமூகம் சார்ந்தோரும் இந்த நிலைவரம் குறித்து கவலை கொண்டுள்ளனர். ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’ போல் இல்லா விட்டாலும் கூட, ‘தாமரை இலையில் தண்ணீர் போல்’ ஆவது இரண்டு சமூகத்தவரும் அண்டி வாழ மாட்டார்களா என்று, சமாதானத்தை விரும்புவோர் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், புகையும் தணலில் பெற்றோல் ஊற்றிவிட்டுப் போயிருக்கிறார் விக்னேஸ்வரன்.

தமிழர்களின் 300 கிராமங்கள் – முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்திய விக்னேஸ்வரனின் கைகளில், அதனை நிரூபிப்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதை, அவருடன் பேசியதிலிருந்தும், அவர் ஊடகங்களுக்கு வழங்கிய பதில்களிலிருந்தும் விளங்கிக் கொள்ள முடிந்தது. ‘தமிழர்களின் 300 கிராமங்கள் – முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்படவில்லை என்பதை, முஸ்லிம்கள் நிரூபித்தால், அவ்வாறான குற்றச்சாட்டினை என்னிடம் கூறியவர்களை அழைத்து, ஏன் இப்படி என்னிடம் தவறான தகவல்களைக் கூறினீர்கள் என்று நான் கேட்பேன்’ என்று அவர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார்.

மிகவும் பாரதூரமானதொரு குற்றச்சாட்டினை வாய்க்கு வந்தபடி கூறிவிட்டு; ‘நான் சொல்வது பொய்யென்றால், அதனை பொய் என்று முஸ்லிம்கள்தான் நிரூபிக்க வேண்டும்’ என்று கூறுகின்றவர், ஒரு முன்னாள் நீதியரசர் என்பதை நினைக்கையில் கவலையாக உள்ளது.

விக்னேஸ்வரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தமையை அடுத்து, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அதற்கு தனது மறுப்பை வெளியிட்டிருந்தார். விக்னேஸ்வரனின் இந்தக் குற்றச்சாட்டு, தமிழர் – முஸ்லிம் உறவை கடுமையாகப் பாதிக்கும் என்று தனது மறுப்பறிக்கையில் கவலை தெரிவித்திருந்த ஹிஸ்புல்லாளூ ‘விக்னேஸ்வரன் கூறிய 300 கிராமங்களும் கிழக்கு மாகாணத்தில் எந்த மாவட்டங்களில் உள்ளன என்பதையும், அதனை அவர் ஊடகங்கள் வாயிலாக உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்’எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதற்கு விக்னேஸ்வரன் இதுவரை பதிலளிக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இதுவரையில் கூறாத குற்றச்சாட்டை, வடக்கிலிருந்து விக்னேஸ்வரன் வந்து சொன்னதன் பின்னணி என்ன என்கிற கேள்வியும் இங்கு முக்கியமானதாகும். இத்தனைக்கும் நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கிழக்கு மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர் என்பதும், அவர் இதுவரை இதுபோன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கவில்லை என்பதும் இங்கு கவனத்துக்குரியதாகும்.

சரி, விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டு குறித்து கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ன கூறுகின்றார்கள் என்பதையும் தெரிந்து கொள்தல் அவசியம் என்பதால், தமிழ் தேசிக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுடன் பேசினோம். விக்னேஸ்வரனின் அந்தக் குற்றச்சாட்டை கோடீஸ்வரன் மறுத்தார். வாய்க்கு வந்தால் போல் இந்தக் குற்றச்சாட்டை விக்னேஸ்வரன் முன்வைத்திருக்கக் கூடும் என்று கூறிய கோடீஸ்வரன்ளூ ‘கிழக்கில் சில கிராமங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன’ என்றும், ‘யுத்த காலத்தில் அச்சுறுத்தல் உள்ளிட்ட சில காரணங்களால், அம்பாறை மாவட்டத்திலுள்ள 08 அல்லது 09 கிராமங்களில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து விட்டனர்’ என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக அம்பாரை மாவட்டம் – மீனோடைக்கட்டு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் இடம்பெயர்ந்தமையை இதற்கு உதாரணமாகவும் கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.

மீனோடைக்கட்டை ஒரு கிராமம் என்று கோடீஸ்வரன் கூறியிருந்த போதும், உண்மையில் அது ஒரு கிராமம் அல்ல. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவொன்றிலுள்ள ஒரு சிறு பகுதியே மீனோடைக்கட்டு என்று அழைக்கப்பட்டது. அட்டாளைச்சேனையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மீனோடைக்கட்டு பகுதில் ஒரு காலத்தில் நூற்றுக்கு உட்பட்ட தமிழர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. ஆயினும், நாட்டில் நிலவிய இனப் பிரச்சினை மற்றும் யுத்தம் காரணமாக, 80களிலிருந்தே அங்கிருந்த தமிழ் மக்கள் தமது காணிகளையும், வீடு வளவுகளையும் முஸ்லிம்களுக்கு விற்பனை செய்துவிட்டு, வேறு ஊர்களுக்குச் சென்று விட்டனர்.

இதுபோன்றே, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஊர்களில் வசித்த முஸ்லிம்களும் இந்தக் காலப்பகுதிகளில் இவ்வாறு இடம்பெயர்ந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறமாக, கிராமம் ஒன்றின் பெயரை விரும்பியவாறு மாற்ற முடியுமா என்கிற கேள்வியும் இங்கு உள்ளது.

இது குறித்து, இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தரும் காரைதீவு பிரதேச செயலாளருமான ஜெகராஜனை தொடர்புகொண்டு பேசினோம். ‘கிராமங்களுக்குப் பெயரிடுவது பொதுநிருவாக அமைச்சின் பொறுப்பாகும்’ என்று அவர் கூறினார். கிராமமொன்றுக்குச் சூட்டப்படும் பெயர், அரச வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோன்று வீதிகளுக்குப் பெயரிடும் அதிகாரம் – உள்ளுராட்சி சபைகளுக்கு உள்ளதாகவும் ஜெகராஜன் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சில இடங்களுக்கு உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பெயர் இடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் இஸ்லாமாபாத் என்றும், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் கோபாலபுரம் எனவும், சுனாமியின் பின்னர் சில பகுதிகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆக, எவ்வாறு பார்த்தாலும் – தமிழர்களின் 300 கிராமங்களை முஸ்லிம்கள் கபளீகரம் செய்த கதையானது, எந்தவித ஆதாரங்களுமற்றதாகும் என்பதோடு, அவ்வாறு நடப்பதற்கு சாத்தியங்களும் மிகமிகக் குறைவாகும் என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஆயினும், விக்னேஸ்வரன் போன்ற படித்த மனிதர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது, அதனை பாமர தமிழ் மக்களில் ஏதோவொரு தொகையினராவது நிச்சயம் நம்புவார்கள். அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது கோபம் வரும். அந்தக் கோபம், இரண்டு இனங்களுக்குமிடையிலான இடைவெளிகளை இன்னும் அதிகப்படுத்தும்.

அரசியலில் மக்களை அறிவு ரீதியாக சிந்திக்கப்பழக்குவதற்கு நமது அரசியல்வாதிகளில் மிகப் பெரும்பான்மையானோர் தயாராக இல்லை. இனரீதியாக உணர்ச்சியூட்டி விட்டு, அதிலிருந்து கிளம்பும் தீயில், குளிர்காய்வதற்கே அதிகமான அரசியல்வாதிகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். விக்னேஸ்வரனின் மேற்சொன்ன குற்றச்சாட்டும் அந்த வகையிலானது என்றுதான் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

வடக்கிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்கு, முதலமைச்சராக இருந்தபோது விக்னேஸ்வரன்தான் முட்டுக்கட்டையாக இருந்தார் என்று, அங்குள்ள முஸ்லிம்களும், அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இன்னும் கூறுகின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் தமது காணிகளை முஸ்லிம்களுக்கு விற்கக் கூடாது என்றும், அண்மையில் விக்னேஸ்வரன் கூறியிருந்தமையும் ஒரு புயலைக் கிளப்பி விட்டிருந்தது.

இந்த நிலையில்தான், கிணற்றைக் காணவில்லை என்று வடிவேல் அழுத கதைபோல, தமிழர்களின் 300 கிராமங்களைக் காணவில்லை என்று, விக்னேஸ்வரன் புலம்பத் தொடங்கியிருக்கின்றார்.

பிக்பொஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர், அந்த நிகழ்ச்சியில் கூறிய ஒரு விடயத்தை இங்கு பதிவிடுதல் பொருத்தமாக அமையும்.

‘நாம் மற்றவர் மீது சுமத்தும் பிழையான குற்றச்சாட்டுகள், நமது நிஜமான குற்றச்சாட்டுகளை வலுவில்லாமல் செய்து விடும்’ என்று, கமல் கூறியிருந்தார்.

ஒரு முன்னாள் நீதியரசருக்கு இதனைக் கூற வேண்டிய நிலைவரத்தை, அரசியல் உருவாக்கி விட்டிருக்கிறது என்பது வேதனையளிக்கிறது.

நன்றி: தமிழர் மிரர் பத்திரிகை (30 ஜுலை 2019)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்