உயர் பீடத்தைக் கூட்டி ஆடும், மு.கா. தலைவரின் நாடகம்: மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

🕔 July 22, 2019

– மரைக்கார் –

முஸ்லிம்களின் பிரச்சிகள் தீர்க்கப்படாத வரை, தமது பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள் எவரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்கக் கூடாது என்று, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.

மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், கடந்த பொதுத் தேர்தலின் போது, மக்களுக்கு வழங்கிய வாக்குகளை நிறைவேற்றி இருக்கிறாரா என்று கேட்டால்; எதுவும் இல்லை. அப்படியென்றால், மு.கா. தலைவரை மக்கள் எப்படித் தண்டிப்பது என்றும் அந்தக் கட்சியின் உயர்பீடம் கூற வேண்டும்.

ஐ.தே.கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிடுவது தொடர்பில், மு.கா. உயர் பீடத்திடம் எந்தவொரு ஆலோசனையையும் ஹக்கீம் கேட்டதில்லை. இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது குறித்தும் உயர்பீடத்திடம் ஹக்கீம் கருத்துக் கேட்டதில்லை. கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை யாருக்குக் கொடுப்பது என்றும் உயர்பீடத்திடம் இதுவரை ஹக்கீம் கேட்டதில்லை. இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை எடுப்பது குறித்தும் உயர்பீடத்திடம் ஹக்கீம் கேட்டதில்லை.

ஆனால், ராஜிநாமா செய்த அமைச்சுப் பதவியை எடுப்பதா? இல்லையா? என்பது குறித்து, உயர் பீடத்திடம் ஹக்கீம் இப்போது கருத்துக் கேட்கிறார் என்றால், அதில் ஏதோ அரசியல் நாடகம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்தல் வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் மூலம் முஸ்லிம்கள் பெற்ற பலன்களை விடவும், இழந்தவைதான் அதிகம்.

ஆனால், இந்த அரசாங்கத்தில் ஹக்கீம் கொழுத்த நன்மைகளை நன்றாகவே அனுபவித்து விட்டார்.

எனவே, தனக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களுக்கு பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, கட்சியின் உயர்பீடத்தைக் கூட்டி, இப்படியொரு நாடகத்தை ஹக்கீம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

அடுத்த தேர்தலுக்கான நாடகத்தை ஹக்கீம் இப்போதே ஆரம்பித்து விட்டார் என்கிறார்கள் விடயமறிந்தவர்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்