றமீஸ் அபூபக்கர் பீடாதிபதியாகத் தெரிவு: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நிகழ்வு

🕔 July 11, 2019

– மப்றூக் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட பீடாதிபதியாக, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒருவர், அந்தப் பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக தெரிவாகியுள்ளமை இதுவே முதன் முறையாகும்.

அந்த வகையில் றமீஸ் அபூபக்கர் – பீடாதிபதியாக தெரிவாகியமை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

இவர் சமூகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த நிலையிலேயே, பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை பீடாதிபதியாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்த றமீஸ்; பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது முதுநிலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்தார்.

பின்னர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம், அவருக்குக் கிடைத்தது.

மிக இளவயதிலேயே பல்வேறு அடைவுகளைப் பெற்றுக் கொண்ட இவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக முக்கிய பல பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அடைவின் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கும், குறிப்பாக தென்கிழக்குப் பிராந்தியத்துக்கும் இவர் பெருமை சேர்த்துள்ளார்.

பீடாதிபதியாகத் தெரிவாகியுள்ள றமீஸ் அபூபக்கர், அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்