ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் முறையீடு

🕔 July 9, 2019

ஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக விமர்சித்துள்ளதை முஸ்லிம்கள் ஏற்கப்போவதில்லை என்று, ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதியை அவரின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசிய போதே, றிசாட் பதியுதீன் இதனைக் கூறினார்.

இதன்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள், நெருக்கடிகள் தொடர்பில் ஜனாபதிக்கு எடுத்துக் கூறிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; நிரபராதிகளை அவசரமாக விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுக்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதிக்குள்ள பொறுப்பாகும் என்பதை இதன்போது வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன்; ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக விமர்சித்துள்ளதை முஸ்லிம்கள் ஏற்கப்போவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கையில், கண்டியில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஞானசாரர் ஆற்றிய உரை முஸ்லிம் சமூகத்தையே நிந்தித்துள்ளது.

அரபு எழுத்துக்கள், குர்ஆன் பிரதிகளை வைத்திருந்தமைக்காக அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யவும் இந்தச் சட்டத்தையே பாவித்துள்ளனர்.

எனவே அவசரகாலச் சட்டத்தை நீக்கி கெடுபிடிகளை நிறுத்த வேண்டும்.

டொக்டர் ஷாபி எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என சி ஐ டி யினர் ஆதாரங்களுடன் நிரூபித்தும் அவரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது அநீதியாகும்” என்பதையும் ஜனாதிபதிக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது எடுத்துக் கூறியதாகவும் றிசாட் தெரிவித்தார்.

இவற்றை நன்கு செவிமடுத்த ஜனாதிபதி, முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான போக்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் றிசாட் பதியுதீன் கூறினார்.

இந்த சந்ததிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம். பௌசி, பைசர் முஸ்தபா, எம்.எஸ். அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப், பைசல் காசீம், அலிசாஹிர் மௌலான, எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்