விமலின் மூளையை பரிசோதியுங்கள்: நாடாளுமன்றில் றிசாட்

🕔 June 18, 2019

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இன்று செவ்வாய்கிழமை நடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி என்று, நாடாளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாத வேளை தெரிவித்திருக்கின்றார்.

எனது தாய்க்கு சகோதரர் இல்லை. இது போன்ற பொய்யான பிரசாரங்களை இந்த உயர் சபையிலையே விமல்வீரவன்ச தொடர்ச்சியாக கூறிவருகின்றார் . தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, நான் உங்களுக்கு ஒன்றைகூற விரும்புகின்றேன். குண்டுகள் வெடித்த நாளிலிருந்து விமல் வீரவன்ச இவ்வாறான பொய்களை சொல்லிசொல்லி இனங்களுக்கிடையே குரோதத்தையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதில் முனைப்புடன் செயற்படுகின்றார்.

அவர் சொல்லுவது எல்லாம் அப்பட்டமான பொய்யாகும். எனவே தான் அவர் எனக்கு எதிராக எந்த விதமான முறைப்பாடுகளையும் பொலிஸில் இதுவரை செய்யவில்லை.

இந்த உயர் சபையின் சிறைப்புரிமையை பயன்படுத்தி இவர் மேற்கொள்ளும் இவ்வாறான பொய்பிரசாரங்களை ஊடகங்களும் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக கொண்டு செல்கின்றது.

எனது அம்மாவுக்கு எந்த சகோதரரும் இல்லை. என்பதையும், இவ்வாறான சம்பவத்துடன் எமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதையும் நான்பொறுப்புடன் இங்கு கூற விரும்புகின்றேன். அது மாத்திரமின்றி இது தொடர்பிலான உண்மைகள் வெளி வரவேண்டும் எனவும் விரும்புகின்றேன்” என்றார்.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்