காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம்

🕔 June 12, 2019

– பாறுக் ஷிஹான்-

யுத குழுவொன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய  ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்  இந்த சடலத்தினை தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் ஆயுததாரிகளால் கடத்திக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட  தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் இன்னும்  மீட்கப்படவில்லை என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2008 ம் ஆண்டு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

அவர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன்  மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா  லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 03 பேரை ஓட்டமாவடி  களுவாஞ்சிக்குடி  கல்லடி ஆகிய இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம்  கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சிஜடி உபபொலிஸ் பரிசோதகர் என். நவரெட்ண, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (23) அனுமதி கோரியிருந்தார்.

இதனையடுத்து சடலத்தை செவ்வாய்க்கிழமை (11 ஆம் திகதி) மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த கொலை தொடர்பில் குற்றவாளிகளாக 07 பேர் இனங்காணப்பட்டுள்னர். இதில் ஒரு  சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். மற்றும்  இருவர்  வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். எஞ்சிய நால்வரில் ஒருவரான மகிழன் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக தோண்டப்படும் இடத்திற்கு தயானந்தன், மதன் மற்றும் லிங்கன் ஆகிய மூவரும்  அழைத்து வரப்பட்டனர்.

எனினும் தோண்டப்பட்ட இடத்தில் சடலம் மீட்கப்படவில்லை. சுமார் 02 மணித்தியாலங்களாக ஒரு இடம் – கடும் ஆழமாகத் தோண்டப்பட்டது. எனினும் அங்கு எதுவித தடயப்பொருளும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அருகில் இருந்த இன்னொரு இடத்தை சந்தேக நபர்கள் நீதிவானின் கவனத்திற்கு காட்டினர். அதனை தோண்டுவதற்கு இன்னொரு திகதி நிர்ணயிக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 11 வருடமாக காணாமல் போன தனது மகனின் நிலைமை குறித்த மர்மம் விலகியமை தனக்கு ஆறுதலை தருவதாகவும் இவ்வாறான நடவடிக்கை ஏனையோருக்கு இடம்பெற கூடாது எனவும் 63 வயதுடைய – காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் தாய் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்