அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு

🕔 June 8, 2019

சிறுபான்மை மக்களுக்காக இப்போது முதலை கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறைகளினால் சேதமாக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாயலுக்கு 27 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்ததுடன், 01 மில்லியன் மாத்திரமே வழங்க முடியும் என கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நிதியமைச்சு வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதால், மக்களை திசை திருப்புவதற்காக அமைச்சர் மங்கள சமரவீர பல்வேறு கருத்துக்களை வெளியிடுகிறார். இறுதி பிரதிபலனாக அமைச்சர் மங்கள, அமைச்சர் என்ற வகையில் தோல்வியடைந்துள்ளார்.

பேச்சினால் மாத்திரம் சிறுபான்மை மக்களை ஆதரிக்கும் இவர்கள் செயலில் எதையும் செய்து காட்ட மாட்டார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, உலகத்திற்கு மத்தியில் இன்று கேலிக்குரியதாக மாறியுள்ளது மாத்திரமல்ல, நாட்டு மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்கும் வேலைத்திட்டமாக மாறியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்ல முடியாது.

பொலிஸ் மா அதிபருக்கு வெளிநாட்டில் தூதுவர் பதவி தருகிறேன், பதவி விலகுங்கள் என்று கூறி தப்பிக்க முடியாது. நாடு படுமோசமான நிலைமைக்கு சென்றுள்ளது. பொருளாதாரம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.

நாங்கள் றக்பி விளையாடினோம், இரும்பு கம்பிகளை வைத்திருந்தோம் என்று கூறி எங்களை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர்.

தூதுவராக பதவி தருகிறேன். பதவி விலகுங்கள் என்று கூறுபவர்களை எங்கே கொண்டு செல்வது” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்