பெருந் தொகைப் பணத்துடன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் கைது

🕔 June 8, 2019

– கலீபா –

பொத்துவில் பிரதேச சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவரை பெருந்தொகைப் பணத்துடன் கடந்த இரவு ராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி உறுப்பினர் குறித்த பணத்துடன் பயணித்திருந்த வேளையில், பொத்துவில் பிரதேச எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்த ராணுவத்தின் சோதனைச் சாவடியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின்போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தேவையொன்றுக்காக தனது சொத்து ஒன்றை விற்பனைசெய்து திரட்டியெடுத்த பணத்தினையே தன்னுடன் வைத்திருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து அறியக்கிடைக்கிறது.

இதேவேளை, அரச தொழில் வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி, பணமோசடி செய்தார் என்று, மேற்படி உறுப்பினருக்கு எதிராக, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த முறைப்பாட்டுக்கு இணங்க, பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் தொடுத்த வழக்கின் சந்தேக நபரான குறித்த உறுப்பினருக்கெதிராக, பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டிருந்த நிலையிலேயே பெருந்தொகைப் பணத்துடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உறுப்பினர், தம்வசம் வைத்திருந்த பணம் பயங்கரவாத செயற்பாட்டு பணப்புழக்கத்துடன் சம்பந்தப்பட்டுள்ளனவா என்றகோணத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்