சஹ்ரானின் மடிக் கணிணி அட்டாளைச்சேனையில் மீட்பு; பாலமுனையில் 35 லட்சம் ரூபாய் பணமும் சிக்கியது

🕔 May 31, 2019

– பாறுக் ஷிஹான் –

ற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானின் மடிக் கணினி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும், புலனாய்வு பிரிவினரும் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த 35 லட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அம்பாறை மாவட்ட பிரதான செயற்பாட்டாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அம்பாறை மாவட்டம் – பாலமுனை ஹுசைனியா நகரில் உள்ள வீடொன்றிலிருந்து இந்த பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை ஆற்றங்கரைப் பகுதியில் வீசப்பட்டிருந்த மடிக் கணினியொன்றும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புபட்ட அம்பாறை மாவட்ட பிரதான செயற்பாட்டாளர் என சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் கல்முனை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஒருவரது உறவினரின் வீட்டிலிருந்தே இப்பணத் தொகையும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது வீட்டின் உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் சந்தேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்பு பட்டவர் எனக் கூறப்படும் சந்தேக நபர், பாலமுனை ஹுசைனியா நகரில் வசித்து வரும் தமது உறவினரிடம் வைத்திருக்குமாறு குறித்த பணத்தினையும் நகைகளையும் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தமது உறவினரிடம் மடிக் கணினியொன்றையும் வைத்திருக்குமாறு வழங்கியபோதிலும் அதனை ஏற்க அவரது உறவினர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, அதனை அவர் எடுத்துச் சென்று அட்டாளைச்சேனை ஆற்றங்கரையினை அண்டிய பகுதியில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வீசப்பட்ட மடிக் கணிணி நீரில் மூழ்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்