ஞானசார தேரருக்கான ஒத்தி வைப்புச் சிறைத் தண்டனையை, அனுபவிக்கும் தண்டனையாக்குமாறு கோரி, மனுத்தாக்கல்

🕔 May 31, 2019

ஞானசார தேரருக்கு ஹோமகமை நீதவான் நீதிமன்றம் விதித்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை, கட்டாய சிறைத்தண்டனையாக மாற்றுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அடுத்த மாதம் 22 ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிசிர டீ அப்ரு, முர்து பெர்ணான்ந்து மற்றும் காமினி அமரசேகர ஆகிய குழு முன்னிலையில் இந்த மனு இன்று வெள்ளிக்கிமை எடுத்துக் கொள்ளப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றத்துக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி ஞானசார தேரர், ஹோமகமை மேல்நீதிமன்றத்தில் மேன்முறையீடொன்றை செய்திருந்தார்.

இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட, ஹோமகமை மேல் நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த ஆறு மாத கால சிறைத் தண்டனையை, ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது.

இந்த நிலையிலேயே, ஞானசார தேரருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை, சட்டத்துக்கு முரணானது எனவும், அந்த தண்டனையை ஆறு மாத காலம் அனுபவிக்கத்தக்க சிறைத்  தண்டனையாக விதிக்குமாறும் கோரி, சந்தியா எக்னெலிகொட, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்