மஸாஹிமா வழக்கு: நீதிமன்றில் இன்று, நடந்தது என்ன: விவரிக்கிறார் சட்டத்தரணி சறூக்

🕔 May 27, 2019

ஸாஹிமா வழக்கில் சட்டத்தரணி சறூக் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் இன்று ஆஜராகினர். இந்த நிலையில், அங்கு என்ன நடந்தது என்பதை, சட்டத்தரணி சறூக் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார்.

அதனை வாசகர்களுக்கு அவ்வாறே வழங்குகின்றோம்

ஹசலக பொலிசாரால் தர்மச்சக்கரத்தை கொண்ட ஆடையை அணிந்து புத்த மதத்துக்கு அபகீர்த்தியை (?) ஏற்படுத்தியதனூடாக இரு சமூகங்களுக்கிடையிலே இனமுறுகலை ஏற்படுத்தியமைக்காக, அப்பாவி முஸ்லிம் பெண்ணான மஸாஹிமா கடந்த 14 நாட்களாக மகியங்கணை நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததமையை நீங்கள் அறிவீர்கள்.

இன்று 27/05/2019 மேற்கூறப்பட்ட வழக்கு மகியங்கணை நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

“குறிப்பிட்ட வடிவம் பௌத்த மதத்தின் புனித சின்னமாகிய தர்மசக்கரமல்ல அது கப்பலின் சுக்கானாகும் ( steering wheel ) என பல ஆதாரங்கள், நீதவானின் கவனத்திற்கு எம்மால் கொண்டு வரப்பட்டது.

அத்துடன் பிரித்தானிய பிரஜை Coleman தொடர்பான tattoo வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பினையும் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

பொலிஸாரின் வேண்டு கோளுக்கிணங்க குறித்த ஆடையானது பௌத்த சமய ஆணையாளர் திணைக்களத்துக்கும், தர நிர்ணய சபைக்கும் (SLS) அறிக்கைகளுக்காக அனுப்பி வைக்க நீதவானால் அனுமதியளிக்கப்பட்டதுடன், கூடிய சீக்கிரம் அதனைச்செய்யும் படி நீதவான் பொலிஸாரை வற்புறுத்தினார்.

“ICCPR சட்டத்தின் நோக்கம் இனங்களுக்கிடையே இன முறுகல் வராமல் தடுப்பதேயாகும். ஆனால் குறித்த அப்பாவியான நோயாளியை எந்த விதமான குற்றமும் செய்யாமல் 14 நாட்கள் தடுத்து வைத்தீர்கள் ஏன்” என்று நாம் பொலிஸாரிடம் கேட்டோம்.

“10 முஸ்லிம் குடும்பங்களை கொண்ட அந்த கிராமத்துக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவே, இவ்வாறு நடந்து கொண்டோம் ” என்று ஹசலக போலிசார் பதிலளித்தனர்.

எது எவ்வாறு இருப்பினும் வழக்கில் எமக்கு சார்பாக இருந்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை எடுத்துக்காட்டி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அல்லது பிணையை வழங்குமாறு நீதவானை வேண்டினோம்.

ஆனால் இவ்வழக்கானது ICCPR சட்டத்தின் கீழ் பொலிஸாரினால் தொடுக்கப்பட்டிருப்பதால், வழக்கை தள்ளுபடி செய்வதற்கோ அல்லது பிணை வழங்குவதற்கோ தனக்கு அதிகாரமில்லை என எமது கோரிக்கைகளை நிராகரித்த நீதவான், வழக்கை எதிர்வரும் 03/06/2019 ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இறுதியாக சிறைக் கைதிகள் மத்தியில் கண்ணீருடன் நின்ற சகோதரி மசாஹிமாவை ஆரத்தழுவி ஆறுதல் வார்த்தைகளை கூறிய பின், தனது கண்ணீரை துடைத்த வண்ணம் எனது மனைவி நுஸ்ரா நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார்.

இவ்வழக்கில் எனது மனைவி சட்டத்தரணி நுஸ்ரா என்னுடன் பாதிக்கப்பட்ட பெண்மணிக்காக மிகவும் ஆக்ரோஷமாக நீதிமன்றில் வாதாடினார்.

ஏழைகளின் துஆவுடன் எமது வாதங்கள் ஒன்று சேர்ந்து சகோதரி மசாஹிமாவின் விடுதலையை எதிர்வரும் 03/06/2019 அன்று பெற்றுத்தருமென எதிர்பார்க்கிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்