முஸ்லிம்களின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்: இலங்கையிடம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள்

🕔 May 15, 2019

லங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ‘முஸ்லிம் நாடுகளின் ஒருமித்த குரல்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி), இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உச்சமடைந்து செல்லும் வன்முறை, தீவிரவாதம், வெறுக்கத்தக்க பேச்சு ஆகியவற்றினால் பரவும் அச்ச நிலையினையும், சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையினையும் எதிர்த்து நிற்குமாறும், அந்த அமைப்பு இலங்கையிடம் கோரியுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளை அடுத்து, நேற்று செவ்வாய்கிழமை இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த அழைப்பினை விடுத்துள்ளது.

இலங்கையிலுள்ள கிண்ணியாம, பிங்கிரிய, ஹெட்டிப்பொல, கொட்டம்பாபிட்டிய, சிலாயம், நிக்கவரெட்டிய, நீர்கொழும்பு, மில்லேகொட, கலப்பிட்டியகம மற்றும் மினுவாங்கொட போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை நெருக்கமாக அவதானித்து வருவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு, கடந்த மாதம் தேவாலங்களிலும் ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களை கடுமையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை எனத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, சில தீவிரவாதிகளின் செயல்களுக்கு எந்தவொரு சமூகமும் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்