லக்ஷபான தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
– க. கிஷாந்தன் –
லக்ஷபான மின்சார உற்பத்தி மையத்தின் நிர்வாகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய மின் கட்டமைப்புக்கு, மின்சாரத்தினை விநியோகிக்கும் – பிரதான மின் உற்பத்தி நிலையமான, இங்கு – நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும், பொறியியலாளர்களும் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தினால் விநியோக பணிகளுக்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பு குறித்தும், விபத்துக்கான காரணம் பற்றியும், இதுவரை அறியப்படவில்லை.
இந்நிலையில், பாதிப்பு ஏற்பட்ட பகுதி தற்போது திருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.