உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா?

🕔 March 20, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

டைவுகளையும், பிளவுகளையும் அநேகமான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் சந்தித்திருக்கின்றன. தலைவர்கள் மீது, தளபதிகளும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கொள்ளும் அதிருப்திகள் கரையுடைக்கும் போது, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிளவடைகின்றமையினை வரலாறு நெடுகிலும் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.

அட்டாளைச்சேனையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீடத்திலும், உள்ளுர் கிளைகளிலும் முக்கிய பதவிகளை வகித்த நூற்றுக்கணக்கானோர், அந்தக் கட்சியிலிருந்து கூட்டாக ‘ராஜிநாமா செய்கிறோம்’ என்று, அந்த நிகழ்வில் அறிவித்தனர். அட்டாளைச்சேனை, மூதூர், மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு ராஜிநாமா செய்தனர்.

உதுமாலெப்பையின் விலகல்

தேசிய காங்கிரசின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் இரண்டாம் நிலை செயற்பாட்டுத் தலைவருமான கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் ராஜிநாமா செய்தார். இதனையடுத்தே, உதுமாலெப்பை முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடந்த நிகழ்வில் வைத்து, நூற்றுக்கணக்கானோர் தேசிய காங்கிரஸிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, தமது விலகல் கடிதங்களை கட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு கோரி, உதுமாலெப்பையிடம் ஒப்படைத்தனர்.

அரசியல் கட்சியொன்றிலிருந்து ராஜிநாமா செய்வதற்காக, ஒரு நிகழ்வையே ஏற்பாடு செய்து, அதில் நூற்றுக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக மேடையேறி, ஊடகவியலாளர்கள் முன்பாக தமது ராஜிநாமா குறித்து அறிவித்தமையானது, அரசியலில் புதியதொரு விடயமாகும். இதனால், அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது மிக மோசமானதொரு வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலைவரமொன்றும் உருவாகியுள்ளது.

தேசிய காங்கிரஸின் வரலாறு

இலங்கையின் செயற்பாட்டு அரசியலில் மூன்று முஸ்லிம் கட்சிகள் உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவையே அந்தக் கட்சிகளாகும்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரசும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்ட உடைவுகளின் போது உருவானவையாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து ரஊப் ஹக்கீமை அகற்றுவதற்காக, தனது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் வெற்றியளிக்காத நிலையில், அந்தக் கட்சியிலிருந்து விலகி, 2003ஆம் ஆண்டு, இப்போதுள்ள தேசிய காங்கிரஸை, ‘அஷ்ரப் காங்கிரஸ ;’ எனும் பெயரில் அதாஉல்லா ஆரம்பித்தார். பின்னர், ‘தேசிய முஸ்லிம் காங்கிரஸ்’ என்று கட்சிக்கு பெயர் மாற்றப்பட்டு, அதன் பிறகு ‘தேசிய காங்கிரஸ்’ ஆனது.

மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அரசியல் செய்தவர் அதாஉல்லா. ரஊப் ஹக்கீமுக்கு முன்பாகவே மு.காங்கிரஸிக்குள் அதாஉல்லா வந்து விட்டார். ரஊப் ஹக்கீமும் பேரியல் அஷ்ரப்பும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் இணைத் தலைவர்களாக இருந்த போது, ஹக்கீமை தனித் தலைவராக்கியவர் அதாஉல்லாதான். ஆயினும், அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸில் அவரால் தொடர்ந்தும் பயணிக்க முடியவில்லை.

குதிரைச் சின்னத்தைக் கொண்ட தேசிய காங்கிரஸை அதாஉல்லா உருவாக்கி வளர்த்தெடுத்தமை என்பது மிகப்பெரும் சாதனை என்பதில் இரண்டுபட்ட கருத்துக்கள் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில், அதுவும் அம்பாறை மாவட்டத்தில் அந்தக் கட்சிக்கு எதிராக மாற்றுக் கட்சியொன்றினை உருவாக்கி வளர்த்தெடுத்தமை என்பது சாமானியமான விடயமில்லை.

தேசிய காங்கிரஸை அதாஉல்லா ஆரம்பித்த காலகட்டத்தில் மு.காங்கிரஸானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமையினால், அந்தக் கூட்டுக்கு எதிரான முகாமுடன் அதாஉல்லா கைகோர்க்க வேண்டியேற்பட்டது. அதனால், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவுடனும், பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவுடனும் அதாஉல்லா கூட்டு வைத்துக் கொண்டார். அதன் காரணமாக, சுமார் 15 வருடங்கள் தொடர்ச்சியாக பலம் பொருந்தியதொரு அமைச்சராக அதாஉல்லா பதவி வகித்தார்.

அதாஉல்லா, உதுமாலெப்பை கூட்டு

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எனும் பதவியையும், பின்னர் பிரதித் தலைவர் பதவியையும் வகித்த உதுமாலெப்பை அட்டாiளைச்சேனையைச் சேர்ந்தவர். அக்கரைப்பற்றும் அட்டாளைச்சேனையும் அருகருகே உள்ள ஊர்களாகும்.

இதனால், அதாஉல்லாவும் உதுமாலெப்பையும் இணைந்து, தேசிய காங்கிரஸை வளர்ப்பதற்கு முடிந்தது. அதாஉல்லாவுக்கு அவரின் சொந்த ஊரான அக்கரைப்பற்று கிட்டத்தட்ட 90 வீதமான ஆதரவை வழங்கியது. அதனால், அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றினை அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸால் கைப்பற்ற முடிந்தது.

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை எனக் கூறப்படும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலும், உதுமாலெப்பை தலைமையில் – தேசிய காங்கிரஸ் 05 ஆயிரத்துக்குக் குறையாத வாக்குகளைப் பெற்று வந்தது. இதனால், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தேசிய காங்கிரசுக்குப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

தேசிய காங்கிரஸ் சார்பாக அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக அதாஉல்லா பதவி வகித்த போது, அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டில் இரண்டு உள்ளுராட்சி சபைகள் இருந்தன. கிழக்கு மாகாண சபையில் தேசிய காங்கிரசுக்கு அப்போது 04 உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களில் உதுமாலெப்பை அமைச்சராகப் பதவி வகித்தார். குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலமானது, தேசிய காங்கிரஸுக்கு பொற்காலமாக இருந்தது.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தோல்வியடைந்தார். அது மிக மோசமானதொரு படுதோல்வியாகும்.

கெட்ட காலம்

ஐக்கிய மக்கள் சுதரந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 36,643 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த அதாஉல்லா, கடந்த பொதுத் தேர்தலில் வெறும் 16,711 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதற்குப் பின்னர்தான், அவருக்கும் அவரின் கட்சிக்கும் ‘கெட்ட காலம் ‘ ஆரம்பமானது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக தனது மூத்த புதல்வரை ஆக்கியதன் மூலம், வாரிசு அரசியலை அதாஉல்லா சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார். இதன் காரணமாக, அவரின் கட்சிக்குள் அதிருப்திகள் ஏற்பட்ட போதும், அவர் அமைச்சராக அதிகாரத்தில் இருந்தமை காரணமாக, அந்த அதிருப்திகள் பாரிய எதிர்ப்புகளாக வெளிக்கிளம்பவில்லை.

இந்த நிலையில், கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் – தனது மூத்த புதல்வருடன் சேர்த்து, இளைய புதல்வரையும் அதாஉல்லா களமிறக்கினார். இதனால், கட்சிக்குள் கடுமையான கசப்புகள் ஏற்பட்டன. அதுவே, அவரின் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் ஆனது.

அதாஉல்லாவின் மூத்த புதல்வர் அரசியலுக்குள் இறக்கப்பட்ட போது மௌமான இருந்த, அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் உதுமாலெப்பைக்கு, அதாஉல்லாவின் இரண்டாவது மகன் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டமையில் உடன்பாடுகள் இருக்கவில்லை. காரணம், தேசிய காங்கிரஸின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளராகப் பதவி வகித்த சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் போன்ற, கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு, உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமலாக்கப்பட்டு, அதனையே தனது இரண்டாவது புதல்வருக்கு அதாஉல்லா வழங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது.

உதுமாலெப்பையுடன் உரசல்

இது உதுமாலெப்பைக்குப் பிடிக்கவில்லை. இது தொடர்பில் அவர் தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, தேசிய காங்கிரசில் அதாஉல்லாவுக்கு நெருக்கமான சில ‘ஜுனியர்கள்’ உதுமாலெப்பையை குறிவைத்து சமூக ஊடகங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

தேசிய காங்கிரசுக்குள் ‘நேற்று’ வந்தவர்ளெல்லாம், அதாஉல்லாவுக்கு நெருக்கமானவர்கள் என்கிற தகுதியை வைத்துக்கொண்டு தன்னை விமர்சிப்பது குறித்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த உதுமாலெப்பை, அதுபற்றி அதாஉல்லாவிடம் முறையிட்டார். தன்னைப் பற்றி ‘இன்னார்தான் ‘ சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை வைத்துக்கொண்டு விமர்சிக்கின்றார் என, அதாஉல்லாவிடம் உதுமாலெப்பை புகார் செய்த போதும், அது குறித்து அதாஉல்லா அலட்டிக் கொள்ளவில்லை.

அதுமட்டுமன்றி, யார்மீது உதுமாலெப்பை குற்றம்சாட்டினாரோ, அந்த நபருக்கு கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவியை அதாஉல்லா வழங்கினார். இதனால், வெறுப்படைந்த உதுமாலெப்பை – கட்சியில் தான் வகித்த பதவிகளையெல்லாம் ஒரு கட்டத்தில் ராஜிநாமா செய்தார். அப்போதும், உதுமாலெப்பையின் குற்றச்சாட்டை அதாஉல்லா கணக்கில் எடுக்கவில்லை. இதுதான் தேசிய காங்கிரஸை விட்டும் விலகும் தீர்மானத்தை உதுமாலெப்பை எடுப்பதற்கு காரணமானது.

உதுமாலெப்பை விலகியமையை அடுத்து, அந்தக் கட்சியின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் பஹீஜும் ராஜிநாமா செய்தார். அதன் தொடர்ச்சியாகவே, நேற்று முன்தினம் நூற்றுக் கணக்கானோர் கூட்டாக ஒரே தடவையில் ராஜிநாமா செய்துள்ளனர்.

அதாஉல்லாவின் குணம்

தேசிய காங்கிரஸிருந்து உதுமாலெப்பையின் வெளியேற்றத்தினை அதாஉல்லா நினைத்திருந்தால் மிக இலகுவாகத் தடுத்திருக்கலாம். தனக்கு எதிராக பரப்புரை செய்கிறார் என்று, உதுமாலெப்பை குற்றம் சாட்டிய நபர் தொடர்பில் அதாஉல்லா நடவடிக்கை எடுத்திருப்பாராயின், உதுமாலெப்பையின் வெளியேற்றம் நிகழ்ந்திருக்காது என்பதே பலரினதும் நம்பிக்கையாகும். ஆனால், அதனை அதாஉல்லா செய்யவில்லை.

அதாஉல்லாவிடம் சிறப்பான பல குணங்கள் உள்ளமை போன்று, அவரிடமுள்ள சில குணங்கள் அரசியலுக்கு ஒவ்வாதவை என்றும் விமர்சிக்கப்படுவதுண்டு. மற்றவர்களின் ஆலோசனைகளை அவர் அநேகமாக மதிப்பதில்லை, விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதில்லை, தனது முடிவிலிருந்து இறங்கி வருவதில்லை என்று, அதாஉல்லா பற்றி, அவரின் கட்சிக்குள்ளேயே பேச்சுகள் உள்ளன.

உதுமாலெப்பை விடயத்தில் அதாஉல்லா கொஞ்சம் இறங்கி வந்திருந்தால், அவரின் கட்சிக்குள் நடந்துள்ள இந்தப் பிளவு தவிர்க்கப்பட்டிருக்கும்.

கள நிலைவரம்

செயற்பாட்டு அரசியலில் அதாஉல்லா சோம்பேசித்தனமானவர் என்று, அவரின் கட்சிக்காரர்களே கூறுவர். தேசிய காங்கிரஸை இந்தளவு களத்தில் இறங்கி ‘கட்டியிழுந்து’ வளர்த்தவர் உதுமாலெப்பைதான். அதனால், தேசிய காங்கிரஸின் அடிமட்ட ஆதரவாளர்களிடம் கூட அதாஉல்லாவை விடவும், உதுமாலெப்பைக்கு அமோக ஆதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால், உதுமாலெப்பையுடன் அடிமட்ட ஆதரவாளர்களில் கணிசமானோர் தேசிய காங்கிரஸை விட்டும் பிரிந்து செல்வதற்கான சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.

உதுமாலெப்பையும், அதாஉல்லாவும் ஒருவரையொருவர் அரசியலில் வெற்றிபெற வைத்ததன் மூலம், இருவரும் வென்றார்கள். அதாஉல்லாவின் அக்கரைப்பற்று வாக்குகள்தான், உதுமாலெப்பை மாகாண அமைச்சராவதற்கு முக்கியமாக அமைந்தன. அதேபோலதான், உதுமாலெப்பையின் அட்டாளைச்சேனை வாக்குகள் சேர்ந்ததால்தான் அதாஉல்லா – நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இப்போது இவர்களின் பிரிவும் – பிளவும், இருவருக்கும் பாதகத்தையே ஏற்படுத்தும்.
ஆயினும், வேறொரு கட்சியில் இணைந்து கொள்வதன் மூலம், தனக்கான சரிவை உதுமாலெப்பை சரி செய்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால், உதுமாலெப்பையின் மூலம் ஏற்பட்டுள்ள இழப்பினை அதாஉல்லா எவ்வாறு ஈடுகட்டப் போகிறார் என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும்.

இந்த நிலையில், அதாஉல்லாவைச் சுற்றியுள்ள ஒரு கூட்டம், உதுமாலெப்பையின் பிரிவு என்பது, தேசிய காங்கிரசுக்கு ஒரு இழப்பே அல்ல என்கிற தொனியில், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது.

இவ்வாறானவர்கள் இருக்கும் வரை, அதாஉல்லாவை அரசியலில் தோற்கடிப்பதற்கு வெளியிலிருந்து யாரும் வரத் தேவையில்லை என்பதுதான் நமது கணிப்பாகும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (19 மார்ச் 2019)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்