கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில்

🕔 March 8, 2019

– ஆர். சிவராஜா –

ல்முனை தமிழ் பிரிவுக்கான உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தினால் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவை வழங்க முடியுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையாலும், பிரதேச செயலகத்தை தரமுயர்த்தினால் அரசாங்கத்தில் இருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கடும் நிலைப்பாட்டினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாரிய அரசியல் நெருக்கடியொன்றை சந்தித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இந்த விடயம் குறித்து அமைச்சர் வஜிர அபேவர்தன, முஸ்லிம் காங்கிரசின் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸுடன் பேச்சு நடத்தியாக தெரிகிறது. அதன் பின்னர் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸுக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் பேசவேண்டிய நிலையில் இருக்கையில், முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையென கருதப்படும் கல்முனைக்கு தனி பிரதேச செயலகமொன்று, கூட்டமைப்பின் பேச்சைக் கேட்டு – தரம் உயர்த்தப்படுமானால் அது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒன்றெனவும், அதைவிட அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது நல்லதெனவும் ஹரீஸ் கட்சித்தலைமைக்கு சொன்னதாக அறிய முடிகிறது. கட்சித் தலைமையும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

அதேவேளை முஸ்லிம் காங்கிரசின் இந்த நிலைப்பாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவை வழங்குவதால் பிரதமர் கடும் அரசியல் நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா அல்லது ஆளுங்கட்சியின் பங்காளிகளா முக்கியம் என்பது குறித்து நேற்று வியாழன் இரவு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரக்ளுடன் பேச்சு நடத்திய ரணில், இது விடயத்தில் சம்பந்தனும் ஹக்கீமும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அவசர பேச்சுவாத்தையை பிரதமர் ரணில் நடத்தவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்