புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம்

🕔 February 12, 2019

– அனீன் அல் மஹ்மூத் –

புத்தளம் அறுவைக்காடு குப்பைத் திட்டத்தை மக்களின் எதிர்ப்பையும் தாண்டி அரசாங்கம் செயற்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பெப்ரவரி 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களையும் புத்தளத்தின் கறுப்பு நாட்களாக சர்வ மதங்கள் சபை, பௌத்த மத்திய நிலையம், கிறிஸ்தவ சபை, இந்து மகாசபை, ஜம்மிய்யதுல் உலமா மற்றும்  புத்தளம் பெரிய பள்ளிவாசல் என்பவற்றுடன் இணைந்து ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பின் இயக்குநரும் சூழலியலாளருமான முபாரக் ஆசிரியர், கண்டல்குளி குறுஞ்சிப்பிட்டி விகாராதிபதி தினசேன தேரர், சேராக்குளிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பங்குத் தந்தை கிறிஸ்டி,  புத்தளம் மாரியம்மன்  கோயில் குருக்கள் வைத்தேஸ்வர சர்மா, வேப்பமடு 4ஆம் கட்டை கதிரேசன் ஐயர் மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்  ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத்தெரிவித்தனர்.

பிரகடனப்படுத்தப்பட்ட பெப்ரவரி 13, 14, 15 ஆகிய மூன்று மூன்று கறுப்பு நாட்களும் புத்தளம் பிரதேசத்தில்  செயற்படுத்தப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்களும் ஊடகங்களுக்கு  தௌிவுபடுத்தப்பட்டன. அந்த வகையில்;

பெப்ரவரி – 13

சகல வீடுகளிலும், வாகனங்களிலும், கறுப்புக் கொடியேற்றி மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தல். சகல அரச/ தனியார் ஊழியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து அலுவலகங்களுக்குச் செல்வதையும் உறுதிப்படுத்தும் நாள்.

பெப்ரவரி – 14

ஊரிலுள்ளவர்கள் நோன்பு நோற்று, இறைவனிடம் தன் கண்ணீர் துளிகளால் கையேந்தும் நாள்.  (ஊருக்கான இப்தார் கொழும்பு முகத்திடலில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது)

பெப்ரவரி – 15

கடையடைத்து பூரண ஹர்த்தால் அனுஷ்டித்து, மதியம் 01 மணிக்கு புத்தளம் கொழும்பு முகத்திடலில் நிகழவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்