ஞானசார தேரரை விடுவித்தால், குறித்த மக்களின் வாக்குகள் கிடைக்காதென ஜனாதிபதி அச்சப்படக் கூடாது

🕔 January 27, 2019

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் கிடைக்காமல் போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே நீக்கிக்கொள்ள வேண்டும் என, இலங்கை இந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட ஒரு தேரரை விடுதலை செய்வதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் எனவும் அந்த சம்மேளனம் கூறியுள்ளது.

ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்துக்கு முன்னர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இலங்கை இந்து சம்மேளனம், இந்து இளைஞர் அமைப்பு மற்றும் இலங்கை குருக்கள் பேரவை என்பன இணைந்து நேற்று சனிக்கிழமை கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருண்காந்த் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

ஞானசார தேரர் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைப் புரிந்தவர் அல்ல. நாட்டிற்காகவும், அவர் நாட்டின் நலனுக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து குரல்  கொடுத்து வந்த ஒருவராவார். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் கேட்டுக் கொண்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“சுதந்திர தினத்திற்கு முன்னர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். இந்நாட்டில் வாழும் இந்துக்களின் சார்பாக இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

கடந்த காலங்களில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களாலும், மத அமைப்புக்களாலும் இந்துக்கள் வேறு மதங்களுக்கு மாற்றப்படுகின்ற அச்சுறுத்தல் நிலையொன்று காணப்பட்டது. அவ்வேளையில் ஞானசார தேரர் நாடு முழுவதிலும் மத மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்ட பிரசாரங்களால் விழிப்புணர்வடைந்த இந்துக்கள் மதமாற்ற முயற்சிகளில் இருந்து தம்மைக் காத்துக்கொண்டனர். அதேபோன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும் பெரிதும் விழிப்புணர்வு பெற்றனர்.

பொதுமன்னிப்பு வழங்கி ஞானசார தேரரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் இல்லாது போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே நீக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட ஒரு தேரரை விடுதலை செய்வதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்