தலைப்புச் செய்திகள்

ஏப்ரலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

ட்ட ரீதியான தடைகள் உடனடியாக அகற்றப்பட்டாலும் கூட, ஏப்ரல் மாதத்துக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

06 மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவது தொடர்பில், பிரதான அரசியல் கட்சிகளுடன் தமது அலுவலகம் பேச்சு நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

“வடமேல், மத்திய, வடமத்திய, வடக்கு, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்களை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.

“புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் முறைமையின் அடிப்படையில்  தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் நிறைவடையவில்லை. அதனால் கலப்பு முறையில்  மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அழைப்பு விடுவதில் சட்டச் சிக்கல்கள் காணப்படுகின்றன” என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பழைய முறையிலான மாகாண சபைத் தேர்தல்  சட்டத்தினை நாடாளுமன்றினூடாக, கொண்டுவருவதற்கான சாத்தியங்கள் குறித்து, அரசியல் கட்சிகள் ஆராய்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு சட்ட ரீதியான தடைகள் இன்றைய தினமே நீக்கப்பட்டாலும் கூட, ஏப்ரல் மாதத்துக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்றும், ஆகக்குறைந்தது தேர்தலுக்குத் தயாராகுவதற்காக 10 வாரங்கள் தமக்குத் தேவைப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.