தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை

🕔 January 6, 2019

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அவசரத்தால், தமிழர்கள் நியாயமான அதிகாரப் பகிர்வை இழக்க நேரிடும்” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலர் தயாசிறி ஜயசேரக தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சுமந்திரன் மேலும் கூறுகையில்;

“ஊடகங்களில் எனது நண்பர்கள் இருவர் தயாசிறி, டிலான் பெரேரா ஆகியோர் கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு சரியான முறையில் செய்யப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கும் அரசியல் அதிகாரங்கள் சரியான முறையிலே கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கின்றவர்கள் இவர்கள் இருவரும்.

எனவே இதுவரையில், முறையான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாகச் செயற்பட்டதைப் போன்று, எதிர்காலத்திலும் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றோம். அதைத்தான் நாங்கள் உங்களிடத்தில் எதிர்பார்க்கின்றோம். நான் உங்களோடு முரண்பட விரும்பவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே இருக்கின்ற மிகவும் முற்போக்கான நீங்கள் இருவரும் அதிகாரப் பகிர்வுக்காக குரல் கொடுத்து, அது காலதாமதமில்லாமல் நிறைவேறுவதற்கு உங்கள் ஆதரவுகளையும் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்