நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்: ஜனாதிபதியை கோருகிறார் எஸ்.பி

🕔 November 23, 2018

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பொருட்டு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு, ஜனாதிபதியைக் வேண்டிக் கொள்வதாக, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மை மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும், இது வரை அவர்கள் அதனைக் காட்டவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;

“தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது. அதனை நாங்கள் தேவை ஏற்படும்போது காட்ட தயாராக இருக்கின்றோம். 120 உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்கள் எங்களுடன் இருந்தனர். என்றாலும் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததால் மீண்டும் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு,இருந்த இடங்களுக்கே சென்றனர். ஆனால் தற்போது எங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்றது.

அதனால் நாடாளுமன்றத்தை கலைக்கும் நிலைப்பாட்டை நீக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொள்கிறோம்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், தற்போதைய அரசாங்கம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் செல்லும். அத்துடன் 2020 ஆம் ஆண்டுதான் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்வோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்