நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகள் தொல்லையால், மக்கள் சிரமம்
– க. கிஷாந்தன் –
நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குரங்குகள், தமது வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை ஏப்பமிட்டுச் செல்வதாகவும், நோர்வூட் வெஞ்சர் பகுதி பிரதான வீதிகளில் – குரங்குள் பெரும் அட்டகாசம் செய்வதனால், மக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதேவேளை, குழந்தைகளை தனியாக விளையாடுவதற்கு அனுமதிக்கவும் தாம் அஞ்சுவதாக தாய்மார் கூறுகின்றனர்.
இப்பகுதி மக்களின் குறைந்த வருமானத்தில், வீட்டிலுள்ளவர்களுக்கான உணவினைக் கொள்வனவு செய்வதற்கே சிரமமாகவுள்ள நிலையில், அவ்வாறு கொள்வனவு செய்யும் உணவுகளையும் குரங்குகள் துவம்சம் செய்து விட்டுச் செல்வதால், இங்குள்ளவர்கள் பெரும் கஷ்டத்தினை எதிர்நோக்க நேரிடுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.