ஹக்கீம், றிசாட் – ஜனதிபதி சந்திப்பு; மஹிந்த பக்கம் மாறலாம்: எகிறுகிறது எதிர்பார்ப்பு

🕔 November 4, 2018

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

முன்னதாக நேற்றைய தினம், ஜனாதிபதி மைத்திரியை, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை றிசாட் பதியுதீன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர்கள் இருவரும் ஜனாதிபதியை சந்தித்துப் பேசவுள்ளதாகவும், மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பருக்கு நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, ரஹக்கீம் மற்றும் றிசாட் ஆகியோர் ஜனாதிபதியை இன்று சந்தித்துள்ளனர்.

றிசாட் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, பிரதியமைச்சுப் பதவியொன்றினை நேற்றைய தினம் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்ததாக, செய்திகள் பரவியிருந்த நிலையிலேயே, ஜனாதிபதியை றிசாட் நேற்றும் இன்றும் சந்தித்துள்ளார்.

இந்த சப்புகளையடுத்து, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆரவளிக்கும் தீர்மானத்தினை எடுக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்