மைத்திரியும் ரணிலும், தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் கொடுக்கும் நிலைப்பாட்டில் இல்லை: பஷீர்

🕔 October 1, 2018
னாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் கொடுக்க தேவை இல்லை என்கிற நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூர் இளைஞர் கழக சம்மேளனத்தை சேர்ந்த இளையோர்களை, அவரின் ஏறாவூர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

பஷீர் சேகு தாவூத் இங்கு மேலும் தெரிவிக்கையில்;

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் சுருக்கம் என்னவென்றால், ஸ்ரீலங்கா ராணுவத்துக்கு உலக நாடுகள் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே ஆகும்.

அவ்வாறு கோருவதற்கான அவரின் தார்மீக உரிமையை நாம் தவறாக பார்க்கவில்லை. ஆனால் உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க தயார் இல்லாத அவர், உலக நாடுகளிடம் இருந்து ஸ்ரீலங்கா ராணுவத்துக்கு பொதுமன்னிப்பு கோரி இருப்பது இயற்கை நீதிக்கு புறம்பான விடயம் ஆகும்.

உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குகின்ற அதிகாரம் அவரிடம் உள்ளபோதும், அவர் அதை செய்யாமல் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் என்று சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் கோரி உள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் சரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் சரி, ஏன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் சரி, சிங்கள மக்களின் வாக்குகளை இலக்கு வைத்த அரசியலை செய்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மையாக உள்ளது.

அதே நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் கொடுக்க தேவை இல்லை என்கிற நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர்.

ஏனென்றால் அவர்களிடம் தேர்தல் காலங்களில் தமிழ் பேசும் அரசியல் தலைமைகள் பூரண சரணாகதி அடைந்து விடுகின்ற வழக்கத்தை கொண்டிருக்கின்றன என்கிற யதார்த்தத்தை, முற்றிலும் உணர்ந்து வைத்திருக்கின்றனர். முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறித்து பேசவே தேவை இல்லை.

மிக நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக மறியல் சாலைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழ் இளையோர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க தயார் இல்லாத சிங்கள பௌத்த பேரினவாத பெருந்தேசிய அரசாங்கம், இன பிரச்சினைக்கான தீர்வை எங்ஙனம் வழங்கும்? இன பிரச்சினைக்கான தீர்வு எட்ட போவதும் இல்லை, அரசியல் அமைப்பு மாற்றம் அதுவாக கிட்ட போவதும் இல்லை.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் மக்களே உள்ளார்கள். மலையக தமிழர்கள் அடங்கலாக தமிழ் பேசும் மக்களின் ஆதரவை பெற்றால் அன்றி 50.1 சதவீத வாக்கை, எந்த சிங்கள தலைவரும் தனித்து பெற்று வெற்றி அடைய முடியாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழர்கள் வாக்களிப்பை புறக்கணித்து ஜனாதிபதி தேர்தலின் முடிவை மாற்றிய சரித்திரம் உள்ளது. அதே போல தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் காரணமாக ஜனாதிபதி மாற்றப்பட்ட வரலாறும் கண் முன் நடந்தேறி உள்ளது.

எனவே தமிழ் பேசும் மக்கள் எடுப்பார் கை பாவைகளாக இருக்காமல், நிதானமாக சிந்தித்து செயற்பட்டு ஒன்றித்து வாக்களித்து இந்நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்றபோது, தவிர்க்க முடியாத அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டு விடும். அப்போது அரசியலமைப்பை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் நேரும்.

இவ்விதம் சிங்கள பௌத்த பெரும்பான்மை பேரினவாத பெருந்தேசிய தலைமையை அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலமே, எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பு, உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாத்து இந்நாட்டில் சம பிரஜைகளாக கௌரவத்துடன் வாழ முடியும்.

இளையோர்கள் இந்நாட்டின் எதிர்கால தலைவர்கள் ஆவர். இவர்களுக்கு சமுதாயம் குறித்த பிரக்ஞையும், பொது நல அக்கறையும் அத்தியாவசியமாக உள்ளன.

சமுதாயத்தை இளைஞர்கள் படிக்க வேண்டி உள்ளது. சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களை படிக்க வேண்டி உள்ளது. இன்று போதை பொருள் பாவனை சமுதாயத்தை ஊடறுத்து நிற்கின்றது. போதை பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் முன்னின்று உழைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டு கொள்கின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்