மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

🕔 January 11, 2018

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றியம் இந்த அழைப்பினை விடுத்துள்ளது.

அந்த அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றினூடாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்;

‘அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை அபகரித்து, இங்குள்ள ஒவ்வொரு ஊரையும் தொடர்ச்சியாக ஏமாற்றி, வாக்குப் பெறும் இயந்திரங்களாக மக்களை மாற்றிவரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை நிறுத்தி, வினா தொடுப்போம், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களே வாருங்கள்.

அட்டாளைச்சேனை மக்கள் – தேசியப்பட்டியலை வேண்டி நிற்போம் வாருங்கள். தீர்க்கப்படாத கடலரிப்பு தொடர்பில் ஒலுவில் மக்களே, கேள்வி கேட்போம் வாருங்கள். உள்ளுராட்சி சபைக்காக கல்முனை மற்றும் சாய்ந்தமருது மக்களை நடு வீதிக்கு இறக்கி விட்டு, நயவஞ்சகம் செய்தமை தொடர்பில் கேட்போம் வாருங்கள். தயா கமகேயுடன் சேர்ந்து மாயக்கல்லி மலையில் சிலை வைப்பதற்குத் துணை போன, ஹக்கீமின் துரோகம் குறித்து கேட்போம் வாருங்கள்.

அக்கரைப்பற்றில் நாளை ஹக்கீமுக்கு எதிராக வினா தொடுப்போம் வாருங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்