ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி

🕔 July 26, 2015

Rishad - sainthamaruthu - 098
– எம்.வை. அமீர் –

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு, இம்முறை தேசியப் பட்டியல் மூலமான பிரதிநிதித்துவத்தினை வழங்கி, அவரை நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப் போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுத்தீன் உறுதிபடத் தெரிவித்தார்.

ஏனைய கட்சிகளைப் போன்று, ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை தருவோம் என்று, தமது கட்சி மக்களை ஏமாற்றாது என்றும் அவர் இதன்போது கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட காரியாலய திறப்புவிழாவும், அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்பு மண்டபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் றிசாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

இப்பிராந்திய மக்கள், அரசியல் ரீதியாக நீண்ட காலமாக காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அதனால்தான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில், இங்குள்ள மக்கள் இணைந்து வருகின்றனர். நாட்டில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், முஸ்லிம் சமூகத்தை அரவணைக்கும் எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். உங்களது தேவைகளை நிறைவேற்றித் தருவோம். அவ்வாறு, உங்களது குறைகளை நாம் நிறைவேற்ற வில்லையென்றால், கட்சியைக் கலைத்து விட்டு சென்று விடுவோம். மக்களுக்குப் பயன்படாத கட்சியோ, அல்லது அமைப்புக்களோஅவசியமற்வையாகும்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, எங்களின் கட்சிக்கு கிடைக்கவிருக்கின்ற தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் ஒன்றினை, முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான – சாய்ந்தமருதிலிருந்து, எங்களுடன் இணைந்துள்ள மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு வழங்கி, அவரை இம்முறை நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறுக்கமான ஒப்பந்தத்தை செய்துள்ளது. புத்திசாதுரியமான ஒப்பந்தத்தின் ஊடாக,  அ.இ.ம.காங்கிரசைச் சேர்ந்த 11 பேர் இம்முறை நாடாளுமன்றம் செல்வார்கள். அந்தவகையில், எமது கட்சி இந்த நாட்டில் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்றார்.

சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபை கோரிக்கை தொடர்பாக, இதன்போது அமைச்சர் றிசாத்திடம் ஊடகவிலாளர்கள் வினவினர்.  அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்; தமது கட்சியிலிருந்து தேசியப்பட்டியல் ஊடாக, நாடாளுன்றம் செல்லவுள்ள அ.இ.ம.காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல், இப்பிராந்திய மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று கூறினார்.

மேற்படி நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், தேசிப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம். ஜெமீல், மக்கள் காங்கிரஸ் தவிசாளர் எம்.எஸ். அமீர் அலி, செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ம.காங்கிரசின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.ஏ. அப்து மஜீத், முன்னாள் உபவேந்தரும் வேட்பாளருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும் வேட்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Rishad - sainthamaruthu - 048

Comments

புதிது பேஸ்புக் பக்கம்