அமைச்சர் றிசாட்தான் எமக்கு அனைத்தையும் செய்து தருகிறார்; ராஜிதவிடம் நெகிழ்ந்த சிங்கள மக்கள்

🕔 August 9, 2017

 

– சுஐப் எம் காசிம் –

மது பிள்ளைகள் அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்” என்று, மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்தில் சிங்கள கம்மான பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர்களான ராஜித சேனாரத்னமற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் சிலாவத்துறை பிரதேசத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைப்பாடுகள் குறித்து அறிந்து கொண்ட அமைச்சர் ராஜித அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுத்த பின்னர் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்துக்கும் சென்றார்.

அங்கு வாழும் சிங்கள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டபோதே, அமைச்சரிடம் மக்கள் மேற்கண்ட விடயத்தினைக் கூறினர்

“நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றோம். யுத்தகாலத்தில் இங்கிருந்து வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்று வாழ்ந்தோம். சமாதானம் ஏற்பட்டு நாம் இங்கு திரும்பிய போது, எமது வீடுகள் முழுவதுமாக அழிந்து கிடந்தன. மக்கள் வாழாததனால் காடுகள் வளர்ந்திருந்தன. பாதைகளும் பற்றைகளால் மூடிக்கிடந்தன. இது நாங்கள் வாழ்ந்த பூமி. வில்பத்துவுக்கும் இந்த பிரதேசத்திற்கும் எந்தத் தொடர்புமே இல்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி ஒருவருக்கொருவர் உதவியாகவே நாங்கள் வாழ்ந்திருக்கின்றோம். நாங்கள் வாழ்ந்த இடங்களை துப்புரவாக்கும்போது வில்பத்து, வில்பத்து என்று கூக்குரல் இடுகிறார்கள். இவர்கள் அப்பட்டமான பொய்யையயே கூறி பிழையான குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

இந்தப் பிரதேசத்திற்கு எவரும் வருவதுமில்லை. எம்மைப் பார்ப்பதுமில்லை. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மட்டுமே அடிக்கடி இங்கு வந்து எமது பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்த்துவைப்பார். எமது மக்களுக்கு 23 வீடுகளை அவர் இதுவரையில் அமைத்துத் தந்திருக்கின்றார். மின்சார வசதியும் ஏற்படுத்தித் தந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே. இந்தப் பிரதேசத்தில் நீருக்கு பெரிய பஞ்சம். அமைச்சர் ரிஷாட் பதியுதீனே குழாய்க் கிணறுகளைத் தந்து நீர்த்தாங்கிகளைத் தந்து கையளித்தார்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“எனினும் எமக்கு நீர்த்தட்டுப்பாடு இன்னும் இருக்கின்றது. பாதைகளும் புனரமைக்கப்பட வேண்டிய தேவைகளும் இருக்கின்றன. இதற்கு அமைச்சர்களான நீங்கள் கருணையுடன் உதவ வேண்டும்”  இவ்வாறு அந்த மக்கள் கூறிய போது, விரைவில் இந்தப் பிரச்சினைகள் இரண்டையும் தாம் தீர்த்துவைப்பதாக அமைச்சர் ரிஷாட் உறுதியளித்தார்.

இவற்றினைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் ராஜித; “நானும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இணைந்து இந்த கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைத்துத் தர நடவடிக்கை எடுப்போம். உங்கள் பிள்ளைகள் தமிழில் கற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தமிழ் தெரியாததனால் நான் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றேன். அமைச்சர் ரிஷாட் உங்களின் மீது அன்பு கொண்டிருப்பதாலேயே இந்தப் பிரதேசத்திற்கு என்னை அழைத்து வந்தார்” என்று கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்