ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம்

🕔 May 18, 2017

– சுஐப் எம் காசிம் –

கேவலமான வார்த்தைகளினால், அல்லாஹ்வை திட்டித் தீர்த்ததன் மூலம், முஸ்லிம் மக்களின் மத உணர்வினை நோகடித்து வரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென, பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழைமை மாலை முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சரமான பைசர் முஸ்தபா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கூட்டாக இணைந்து, இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

முஸ்லிம்கள் தொடர்பாகவும் அல்லாஹ் பற்றியும் ஞானசாரர் வெளியிட்ட மோசமான கருத்துக்களைக் கொண்ட ஆவணங்களையும் இதன்போது, முறைப்பாட்டாளர்கள் பொலிஸ் தலைமையகத்தில் சமர்ப்பித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு வழியுறுத்தினர்.

பொலிஸ் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர், பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்த மேற்படி மக்கள் பிரதிநிதிகள்;  ஞானசார தேரரின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல் இருப்பதாக விவரித்தனர்.

“கடந்த ஆட்சியிலும் அல்லாஹ்வையும் ரசூலையும் மோசமாக தூஷித்த இந்த இனவாத தேரர், இந்த ஆட்சியிலும் எந்தக்குறைவுமில்லாது
, சட்டத்துக்கு எந்தப்பயமுமில்லாது, அதே போன்ற அராஜக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார். பொலிசாரும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. நல்லாட்சி அரசாங்கமும் அவரைக் கட்டுப்படுத்தாமல் இருக்கின்றது. அந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் முஸ்லிம்களை பொறுத்த வரையில் எந்த வித்தியாசமும் இருப்பதாக நாங்கள் காணவில்லை. ஞானசாரரின் நடவடிக்கையில் முஸ்லிம்கள் கொதிப்படைந்து இருப்பதுடன் நல்லாட்சியிலும் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

சட்டத்தையும் நீதியையும் அவர் துச்சமாக கருதுகின்றார். முஸ்லிம்களை பொறுத்தவரையில் நீதி, செத்து விட்டதா? என எண்ணத்தோன்றுகின்றது. அமைச்சர்களாகிய நாங்கள் பொலிசுக்கு வந்து முறைப்பாட்டைப் பதிவு செய்யுமளவுக்கு நிலைமை உருவாகிவிட்டது. எனவே ஞானசாரரை கைது செய்யாவிடின், நாட்டின் அமைதி சீர்குலைய சந்தர்ப்பமுள்ளது” என்று, முறைப்பாட்டாளர்கள் இதன்போது, பொலிஸ்மா அதிபரிடம் அழுத்தமாகத் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்