கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்: இம்ரான் மகரூப்

🕔 May 11, 2017

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப் பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிண்ணியா  பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கிண்ணியா போது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரேரணையொன்றினை சமர்பித்து உரையாற்றம் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

குறித்த பிரேரணை தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் நகர சபை எல்லைக்குள் 17 கிராம சேவகர் பிரிவுகளும், பிரதேச சபை எல்லைக்குள் 14 கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளன. ஆனால், நகர சபைக்குள் அதிக சனத்தொகையும் பிரதேச சபைக்குள் குறைந்த சனத்தொகையும் காணப்படுகின்றன.

அதேவேளை, நகர சபையின் நிலப்பரப்பு சுமார் 10 சதுர கிலோமீட்டராகும். பிரதேச சபையின் நிலப்பரப்பு சுமார் 135 சதுர கிலோமீட்டராக உள்ளது. அரச காணி நகர சபை எல்லைக்குள் மிகக் குறைவாகவும் பிரதேச சபை எல்லைக்குள் மிக அதிகமாகவும் காணப்படுகின்றன. இதனால்எதிர்காலத்தில் நகர சபை பகுதிக்குள் அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ளவேண்டி வரும்.

எனவே கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபையின் எல்லையாக அமைந்துள்ள உப்பாறு கிராம சேவகர் பிரிவில் அதிக அரச காணி காணப்படுவதாலும், அங்கு குறைந்தளவான மக்கள் வசிப்பதனாலும், தற்போது பிரதேச சபை எல்லைக்குள் காணப்படும் உப்பாறு கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதியை நகர சபை எல்லைக்குள் உள்வாங்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக அண்மையில் அமைச்சர் பைசல் முஸ்தபாவையும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறுப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்