பகிடிவதையில் ஈடுபட்டவர்களின் மகாபொல ரத்துச் செய்யப்படும்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

🕔 April 10, 2017

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டமை காரணமாக, வகுப்புத் தடையினை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப் பரிசில் மற்றும் பல்கலைக்கழக விடுதி வசதிகளை இல்லாமற் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்துள்ளார்.

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு ஒரு மாத கால வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று, பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கூறியுள்ளார்.

அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 07ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.   புதிய மாணவர்களை கடந்த 06ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 பெண் மாணவர்களும், 10 ஆண் மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் பகடி வதைக்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

புதிய மாணவர்களில் தமிழ் மாணவிகள் தலைமுடியை இருபுறமும் பின்ன வேண்டும் என்றும், சிங்கள மாணவிகள் தலைமுடியை தனியான பின்னலாக போட்டு வரவேண்டும் என்பதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இரண்டாம் வருட மாணவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.   அத்துடன் புதிய மாணவர்கள் பகடிவதைக்கு உட்படுத்தப்பட்ட கால எல்லைக்குள் உள்ளாடைகள் அணியவும் இந்த மாணவர்கள் தடைவிதித்துள்ளனர்.

மேலும், பகடிவதைக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில் காலை உணவு தொடர்பில் கட்டுபாடு விதிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு வேப்பிலை பானம் மற்றும் மிளகாய் என்பவற்றை உண்ணுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இவற்றினை உட்கொண்டவர்கள் வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பகடிவதையில் ஈடுபட்ட மாணவ, மாணவர்கள் 28 பேர் தொடர்பில் ஆகக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட மகாபொல புலமைப் பரிசில் மற்றும் பல்கலைக்கழக விடுதி வசதிகள் என்பவற்றை இல்லாமற் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ​தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்