டெங்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியாவுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்; அவசரத் தேவைக்காக 79 லட்சம் ரூபா ஒதுக்கினார்

🕔 March 16, 2017

 

– சுஐப் எம் காசிம் –

டெங்கு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேசத்துக்கு 79 லட்சம் ரூபாவினை அவசரமாக ஒதுக்குவதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

கிண்ணியாவுக்கு இன்று வியாழக்கிழமை மாலை அமைச்சர் விஜயமொன்றினை மேற்கொண்டபோதே, இதனைக் கூறினா்.

அதேவேளை, கிண்ணியாவில் டெங்கு நோயினால்  மக்கள் படுகின்ற அவஸ்தைகளை  மீண்டும்  ஜனாதிபதியை சந்தித்து இன்றைய தினம் நேரில் விளக்குவதோடு, மேலும் பல அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவும், அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியா பொதுநூல் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப், கிண்ணியா முன்னாள் நகரபிதா ஹில்மி மஹ்ருப் உட்பட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், மருத்துவ அலுவலர்கள், ஜம்யியத்துல் உலமா, மஜ்லிஸுல் ஸுரா பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளையும் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகளின் பராமரிப்பு தொடர்பிலும் நோய் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இடம்பெறும் நடவடிக்கைகளுக்கு, தான் நிதியுதவியளிப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார். மேலும் சுகாதார அதிகாரிகளிடம் அவசரத்தேவைகள் குறித்த விபரங்களைப்பெற்றுக்கொண்டார்.

வைத்தியசாலையின் தற்போதைய களஞ்சியசாலையொன்றிலுள்ள பொருட்களை அப்புறப்புறப்படுத்துவதற்கான கொள்கலன்களை வாடகைக்கமர்த்துவதற்கு 02 மில்லியன் ரூபாவினை அவசரமாக ஒதுக்குவதாக தெரிவித்த அமைச்சர், இடவசதியில்லாமல் வீடுகளிலிலேயே சிகிச்சை பெற்று வரும் வெளி நோயாளர்களை தங்க வைப்பபதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள கிண்ணியா ஜாயா வித்தியாலயத்துக்கான பௌதீக ஆளணி வசதிக்கென 5.9 மில்லியன் ரூபாவையும் உடன் ஒதுக்குவதாக தெரிவித்தார்.

இதனை விட நுளம்பு வலைகள், மருந்துப் பொருட்களின் தேவைகளை தமக்கு தெரிவிக்குமாறும், அவற்றினைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாவும் அமைச்சர் உறுதியளித்தார். ஜனாபதியை நேற்று புதன்கிழமை காலை சந்தித்து கிண்ணியா டெங்கு பாதிப்புக்களை எடுத்துரைத்த போது, சுகாரதார பணிப்பாளர் மற்றும் மஹ்ருப் எம்.பி யுடனும் ஜனாதிபதி,தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடுத்த நடவடிக்ககைகளையும் அமைச்சர் விபரித்தார்.

சுனாமிக்கு தற்காலிகமாக கட்டப்பட்ட இந்த வைத்தியசாலை தொடர்ந்தும் எத்தகைய வசதிகளுமின்றி நிரந்தர வைத்தியசாலையாக செயலாற்றுவதனாலேயே நோயாளர்களை பராமரிப்பதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த வைத்திய அதிகாரிகளும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும்,  வைத்தியசாலையின் இடப்பரப்பை அதிகரித்து சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக மாற்றியமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். இந்தக்கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து, கிண்ணியா மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதிமற்றும் சுகாதார அமைச்சருடன் பேச்சு நடத்துவேன் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

அத்துடன் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை மேலும் கிண்ணியா பிரதேசத்துக்கு அனுப்பி வைப்பது தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்தவதாக கூறினார்.

இந்த இக்கட்டான நேரத்தில் நோயாளிகளுக்கு சிரமம் பாராது பணிபுரியும் சுகாதார துறையினருக்கும் டெங்கு பரவாது தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொண்டர்கள் படையினருக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர், மனித உயிர்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் தமது பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

கிண்ணியா வைத்தியசாலையில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ள விசேட சிகிச்சைப் பிரிவுக்கென 09 விசேட வைத்தியர்கள் கண்டியிலிருந்து வருவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர்,  கிண்ணியா வைத்தியசாலைக்கு சென்று நோயாளர்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்