இஸ்லாமிய குழுக்களிடையே காத்தான்குடியில் நடந்த மோதல் தொடர்பில் இருவர் கைது

🕔 March 11, 2017
– பழுலுல்லாஹ் பர்ஹான் –

மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட இஸ்லாமிய மார்க்க குழுக்களிடையே, காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்தார்.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காத்தான்குடி-06ம் பிரிவு – கர்பலா வீதி, அலியார் சந்தி முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை, தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் ‘நாம் அத்வைதிகளை மதம் மாறியவர்கள் என்று சொல்வதேன்’ எனும் தலைப்பில் ஓரிறைக் கொள்கை விளக்கக் கூட்டம்  நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

இந்நிலையில்,  தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தரப்புக்கும் அப்துர் ரஊப் மௌலவி தலைமையிலான ஸூபிஸ ஸூன்னத் வல் ஜமாஅத் தரப்புக்கும் இடையில் நேற்று மோதல் சம்பவமொன்ற இடம்பெற்றது.

இந்த மோதலில் வாள்வெட்டு மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இதில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, அப்துர் ரஊப் மௌலவி தரப்பைச் சேர்ந்தவர்களில் வாள்வெட்டுக்கு இலக்கான அபூபக்கர் முஹம்மட் முஸப்பிர் (வயது 25) என்பவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதேவேளை, கல்வீச்சுக்கு இல்கான அபூ ஸாலிஹ் பஹ்மி (வயது 36) என்பவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இம் மோதல் தொடர்பாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருவதாகவும் மிக விரைவில் இம் மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து, தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த ‘நாம் அத்வைதிகளை மதம் மாறியவர்கள் என்று சொல்வதேன்’ எனும் தலைப்பிலான கூட்டத்தினை நிறுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்நிகழ்வு இடை நிறுத்தப்பட்டது.

மோதல் சம்பவத்தினையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதர மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உயரதிகாரிகள் ஸ்தலத்துக்கு விஜயம் செய்தனர்.

இதேவேளை, தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில், இரண்டு தரப்பினரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்