சமூக மாற்றத்தைக் கொண்டு வருவது, கடினமான விடயம்: உபவேந்தர் நாஜிம்
🕔 July 24, 2016
– எம்.வை. அமீர் –
சமூக மாற்றத்தை கொண்டுவருவது என்பது மிகவும் கடினமான விடயம் என்பதை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவியேற்று ஒருவருடமும் ஒரு மாதமும் நிறைவடையும் இவ்வேளையில் – தான் உணர்வதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.
கலாநிதி அபூபக்கர் றமீஸ் எழுதிய “சமூகவியல் சமூக மானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு, சாய்ந்தமருது பாரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக் தலைமையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே உபவேந்தர் நாஜிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நூலாசிரியர் கலாநிதி அபூபக்கர் றமீஸ், தனது தாயார் யூ.கே.வதவியத்தும்மாவுக்கு, நிகழ்வின் சிறப்பு அதிதி பேராசிரியர் எம்.ஏ. நுஃமானூடாக தனது நூலின் பிரதி ஒன்றினை வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் உபவேந்தர் நாஜிம் தொடர்ந்து உரையாற்றுகையில்;
“சமூக மாற்றம் தெடர்பான விடயங்களை தொகுத்து புத்தகவடிவில் கொண்டுவருவது மிகக் கடினமான விடயமாகும். கலாநிதி அபூபக்கர் றமீஸ் எடுத்துள்ள இந்த முயற்சி சவால்கள் நிறைந்த, சிறந்த செயற்பாடாகும். இவ்வாறான முயற்சிகள் நமது சமூகத்தில் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழில் வெளியாகும் இவ்வாறான நூல்கள் மிக அரிதானவை. இன்னும் நிறைய நூல்களை கலாநிதி றமீஸ் போன்றோர் வெளியிட வேண்டும். அதனுடாக சமூக மாற்றங்கள் நிகழவேண்டும்.
சமூகத்தில் மாற்றம் ஒன்றைக்கொண்டுவருவது எவ்வளவு கடினமாது என்பதை, எனது அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். அவ்வாறானதொரு மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் போது, நான் எதிர்நோக்கும் சவால்களை அநேகர் அறிவார்கள்” என்றார்.
நிகழ்வில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் நூல் அறிமுகத்தையும், ஏற்புரையை நூலாசிரியரும் வழங்கினர்.