அமைச்சர் றிசாத்துடன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு
🕔 June 25, 2016
– முன்ஸிப் –
ஊடகவியலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, தன்னால் சாத்தியமான அனைத்து உதவிகளையும் புரிவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பு சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் சபா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இதன்போதே, அமைச்சர் இந்த உறுதிமொழியினை வழங்கினார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன், செயலாளர் எம். சஹாப்தீன், பொருளாளர் யூ.எல். மப்றூக் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் பேரவையின் அங்கத்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அமைச்சருடன் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை மேற்கொண்டு வரும் நன்நோக்கு நடவடிக்கைகள் பற்றி அமைச்சருக்கு பேரவையின் பிரதிநிதிகள் விளக்கியதோடு, தமது எதிர்கால திட்டங்கள் பற்றியும் விபரித்தனர்.