விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்
முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் ரகசியமான முறையில் எப்போதும் இல்லாதவாறு நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டை விடவும் அவை பயங்கரமானவை என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
மேலும், நாட்டிலுள்ள பெருமளவான காணிகளை கட்டாரிலுள்ள இளவரசர்கள் கொள்வனவு செய்துள்ளனர் என்றும், அமைச்சர் பைஸர் முஸ்தபா இதன் பின்னணியில் செயற்படுவதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்;
“பொதுபலசேனா அமைப்பு தொடர்பில் சில அரசியல்வாதிகள் தவறான கருத்துகளை முன்வைக்கின்றனர். எமது அமைப்புக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் தொடர்பிருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். நோர்வேயிலிருந்து நிதி கிடைப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
எனினும் அவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள். அவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் நிரூபிக்க வேண்டும். அதனைவிடுத்து ஊடகங்ளில் வெறும் விமர்சனம் செய்வதில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் ஆட்சிகாலத்தில் நாம் ஹலால், கூரகல, சட்டக்கல்லூரி,வில்பத்து விவகாரங்களுக்கு எதிராக குரல் கொடுத்தோம். தற்போது ஊடகங்கள் மூலம் எமக்கெதிராகக் குரல் கொடுப்பவர்கள்தான் அன்றும் எம்மை எதிர்த்தனர்.
பொதுபல சேனா அமைப்பை கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகளிடமிருந்தோ அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தோ நாம் எவ்வித நிதியுதவிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை. நாட்டிலுள்ள வறிய மக்கள் சிறுக சிறுக தாம் சேகரித்த பணத்தை அன்பளிப்பு செய்து இந்த அமைப்பை வளர்த்தனர்.
நாம் இனங்காட்டிய பிரச்சினைகள் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
நாட்டில் தற்போது என்றுமில்லாதவாறு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் ரகசியமான முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த நான்கு வருடங்களில் இந்நாட்டிலுள்ள நான்காயிரம் சிங்கள யுவதிகள் முஸ்லிம்களாக மதம் மாற்றியுள்ளனர்.
அது மாத்திரமல்லாமல் உலமா சபையினால் ‘தப்லீக் நிகாயா’ எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த தப்லீக் நிகாயா அமைப்பு, ஒரு நாளில் இந்நாட்டின் நகரப் பகுதியிலுள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பை கையகப் படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நடவடிக்கைக்காக பெருமளவிலான நிதி அவ்வமைப்புக்கு கிடைக்கிறது. ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் பெளத்தர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும்.
மேலும் பாரியளவான பரப்புக்கொண்ட காணிகளை கட்டார் நாட்டிலுள்ள இளவரசர்கள் ரகசியமான முறையில் கொள்வனவு செய்கின்றனர். இதன் பின்னணியில் அமைச்சர் பைஸர் முஸ்தபா செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் ஒவ்வொரு மாதமும் மத்திய கிழக்கிலிருந்து சுமார் 12 ஷேக்மார்கள் இலங்கைக்கு வருகை தருகிறார்கள். ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் இங்குள்ளனர். அது தொடர்பில் எந்தவொரு அரசியல்வாதியும் குரல்கொடுப்பதில்லை.
எனினும் அந்நடவடிக்கைக்கு எதிராக நாம் குரல்கொடுத்தால் எமக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
எனவே, குறித்த அமைப்புகளுக்கு வரும் நிதி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டை விடவும் தற்போது நாட்டில் மோசமான வகையில் அடிப்படைவாதமும் ஆக்கிரமிப்புகளும் இஸ்லாம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும்.
அதனை விடுத்து எமக்கெதிராக வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டாம்.
அவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றிப் பேசாது, பொதுபல சேனா அமைப்பையே குற்றம் சுமத்துகின்றனர்.ஆகவே அவர்கள் எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே, அது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அத்துடன் குற்றம் சுமத்துபவர்கள் அனைவரும் இணைந்து எம்மோடு ஊடக விவாதத்திற்கு வாருங்கள்” என்றார்.