ஊடகவியலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், தம்மிக ரணதுங்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆஜராகுமாறு, துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர் தம்மிக ரணதுங்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
தம்மிக ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அங்கு தம்மிக ரணதுங்க வருகை தந்தார்.
இதன்போது, நீதிமன்றத்துக்கு வெளியில் நின்றிருந்த ஊடகவியலாளர்கள் தம்மிக ரணதுங்கவை படமெடுத்தனர்.
இதனை அவதானித்த தம்மிக்க ரணதுங்க, ஊடகவியலாளர் ஒருவரை நெருங்கி, அவரை மோசமான வார்த்தைகளால் திட்டியதோடு, அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
தொடர்பான செய்தி: துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர், ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (வீடியோ இணைப்பு)