நாடு முழுவதும் மின்தடை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு
நாடு முழுவதும் நேற்று வியாழக்கிழமை சுமார் 04 மணி நேரம் மின்தடை ஏற்பட்டமை தொடர்பில் அறிக்கை ஒன்றினை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் பிரதமர் அறிக்கையொன்றினை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் கடந்த 05 மாதங்களில், இரண்டாவது தடவையாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் சுமார் 03 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இலங்கை மின்சார சபையின் தொழில் நுட்ப கோளாறு இதற்குக் காரணமாகும்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட மேலும் கூறுகையில்; “இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப்பிக்கும் பொருட்டு இரண்டு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. இலங்கை மின்சார சபை அதிகாரிகளைக் கொண்ட உள்ளகக் குழுவும், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட வெளிக் குழு ஒன்றும் நியமிக்கப்படும். இவர்கள் விசாரணைகளை மேற்கொள்வர்” என்றார்.