யோசிதவின் சிறை அறைக்கு அருகில், தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் கருவி பொருத்த நடவடிக்கை
யோசித ராஜபக்ஷ சிறைவைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகில், கைத் தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகளை முடக்கும் கருவிகளை பொருத்தும் நடவடிக்கைகளில் சிறைச்சாலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் யோசித ராஜபக்ஷ விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்த முடியாதபடி அவற்றின் சமிக்ஞைகளை முடிக்கும் கருவிகளை யோசிதவின் சிறை அறைக்கு அருகில் பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் தொலைத் தொடர்புகள் அமைச்சுடன் சிறைச்சாலைத் திணைக்களம் பேசி வருகின்றது.
யோசிதவின் சிறை அறைக்கு அருகில் கைத்தொலைபேசியொன்று கண்டெடுக்கப்பட்டமையினை அடுத்து, அவர் சிறைக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்பட்டது.
யோசித ராஜபக்ஷவும், சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் அதிகாரிகள் நால்வரும் பணச் சலவைக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.