குவைத், சஊதியில் துன்புறுத்தலுக்குள்ளான 111 பேர், நாடு திரும்பினர்
குவைத் மற்றும் சஊதி அரேபியா நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில், அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான 111 பேர் இன்று புதன்கிழமை நாடு திரும்பியதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
இவர்களில் 100 பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாக குவைத் சென்றவர்கள். ஏனைய 04 ஆண்களும், 07 பெண்களும் சஊதி அரேபியாவுக்கு வேலைக்காகச் சென்றவர்களாவர்.
மேற்படி நபர்கள் – அவர்களின் வேலை வழங்குநரால் பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பளம் கிடைக்காமை, உடல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டமை மற்றும் வேலைக் கால ஒப்பந்தம் நிறைவடைந்த பின்னரும் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளாமை போன்ற பல சிக்கல்களுக்கு மேற்படி நபர்கள் முகம்கொடுத்திருந்ததாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் மதுஷன் குலரத்ன தெரிவித்தார்.
இன்று நாடு திரும்பிய மேற்படி நபர்கள் திருகோணமலை, பொலநறுவை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.