யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை
மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடற்படை தலைமையகத்தில் சற்று முன்னர் இந்த விசாரணை இடம்பெற்றதாக அறிய முடிகிறது.
கால்டன் ஸ்போர்ட்ஸ் நெற்வேர்க் எனப்படும் சி.எஸ்.என். ஊடக நிறுவனம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
யோசித ராஜபக்ஷ – சி.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் உரிமையாளர் என்பதோடு, கடற்படையில் லெப்டினன்ட் தரத்திலும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ராணுவ நீதிமன்றில் ஆஜராகுமாறு யோசித ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஊகத்தின் அடிப்படையிலான செய்திகள் வெளியாகி இருந்தன.
யோசித ராஜபக்ஷ, அவரின் பதவியை துஷ்பிரயோகம் செய்ததோடு, கடற்படைச் சட்டத்தினை மீறிச் செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, அவர் ராணுவ நீதிமன்றம் முன் அழைக்கப்பட்டுள்ளார் என்று அந்தச் செய்திகள் தெரிவித்திருந்தன.
எவ்வாறிருந்தபோரும், மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடற்படை முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், ஜனாதிபதியின் தீர்மானத்தினையடுத்து யோசித ராஜபக்ஷ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.