போலி பேஸ்புக் கணக்கு திறந்தவரை, கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு
போலியான பேஸ்புக் கணக்கினை பெண்ணின் பெயரில் திறந்து, அதனூடாக குறித்த பேஸ்புக்கில் நண்பர்களாக இணைந்தவர்களை பயமுறுத்தினார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபரொருவரைக் கைது செய்யுமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைவாகவே, இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், பெண்ணின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கினைத் திறந்து, அதில் நண்பர்களாக இணைந்த பலரை பயமுறுத்தியுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் – நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.
நாட்டுக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் மேற்படி நபர் தனது பேஸ்புக் கணக்கினை இயக்கியதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூறியுள்ளது.
மேற்படி சந்தேக நபர், கடந்த ஜனவரி 17 ஆம் திகதி நாட்டை விட்டுத் தப்பியோடியதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆயினும் குறித்த நபர் நாட்டிலிருந்து வெளியேறினாலோ அல்லது நாட்டுக்குள் வரும்போதோ அவரைக் கைது செய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.