சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,732 முறைப்பாடுகள் பதிவு; கொழும்பு முன்னிலை
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக கடந்த வருடம் 10,732 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதற்கமைவாக கொழும்பில் மாத்திரம் 1522 முறைப்பாடுகளும், நாடுமுழுவதிலும் மொத்தமாக 10,732 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் நடாஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்;
“அதிகார சபையின் 1929 அவசர அழைப்பு இலக்கத்திற்கு கடந்த 2015 ஆண்டில் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நாடுமுழுவதிலும் இடம்பெற்ற சிறுவர்கள் மீதான குற்றச்செயல்கள் 10,732 ஆக பதிவாகியுள்ளன.
இதில் அதிகமான முறைப்பாடுகள் கொழும்பில் பதிவாகியுள்ளன. அம்பாறை 246, அனுராதபுரம் 573, பதுளை 271, மட்டக்களப்பு 158, காலி 700, கம்பஹா 1187, அம்பாந்தோட்டை 439, யாழ்ப்பாணம் 198, களுத்துறை 634, கண்டி 474, கேகாலை 404, கிளிநொச்சி 104, குருணாகல் 827, மன்னார் 65, மாத்தளை 222, மாத்தறை 389, மொனராகலை 241 முல்லைத்தீவு 121, நுவரெலியா 235, பொலன்னறுவை 302, புத்தளம் 540, இரத்தினபுரி 622, திருகோணமலை 130, வவுனியா 128 என்ற எண்ணிக்கையில் மாவட்ட அடிப்படையில் முறைபாடுகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள குற்றசாட்டுக்களில் 753 பாலியல் ரீதியிலான அடக்குமுறைகள், 433 வன்புனர்வு சம்பவங்கள், 313 சிறுவர் தொழிலாளர்களாக அமர்த்தல் தொடர்பான குறச்சாட்டுக்கள், 2317 சிறுவர் மீதான துன்புறுத்தல்கள், 219 சிறுவர் கடத்தல் சம்பவங்கள் உள்ளடங்குகின்றன”.