எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை
எழுத்துப் பிழை ஏற்படுத்திய பிரச்சினை காரணமாக, 10 வயது முஸ்லிம் மாணவர் ஒருவரிடம் பிரித்தானியப் பொலிஸார் விசாரணை நடத்திய சம்பவமானது விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பாடப் புத்தகத்திலுள்ள கேள்வியொன்றுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த முஸ்லிம் மாணவர் ஒருவரே, இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார்.
ஆங்கில பாடப் புத்தகத்தில், ‘நீ எங்கே வசிக்கிறாய்?’ என்ற கேள்விக்கு terraced house (மாடி வீடு) என்பதற்கு பதிலாக terrorist house (தீவிரவாதி வீடு) என்று எழுதியமையினாலேயே இந்தப் பிரச்சினை உருவானது.
மேற்படி முஸ்லிம் மாணவர் பாடப் புத்தகத்தில் எழுதியிருந்த பதிலை கண்ட அவரின் ஆசிரியை, உடனடியாக சிறுவனை விசாரிக்க வேண்டும் என போலிஸில் முறைப்பாடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து சிறுவனிடம் போலிஸார் விசாரணை நடத்தியதோடு, அவரின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
மற்றுமன்றி, சிறுவனுடைய பெற்றோரின் மடிக் கணிணியும் கைப்பற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
ஆயினும், அவர்களது வீட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் எந்தவித தடயங்களும் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மாணவரின் எழுத்துப் பிழையை, ஆசிரியை தவறாக புரிந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.