பாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம்
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது பாலியல் அல்லது வேறுவகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தால், அது குறித்து தம்மிடம் முறையிடுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குறித்த நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கும் சபாநாயகர் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்றும் சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயினும், சபாநாயகரிடம் யாரும் இதுபோன்ற முறைப்பாடுகளை இதுவரை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இருந்தபோதும், இவ் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்துவார் என்றும் சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே, சபாநாயகர் அலுவலகம் மேற்படி அறிவிப்பினை விடுத்துள்ளது.