அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில்
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் சட்ட மூலம் எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க பாரிய பங்ளிப்பை செய்ததாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றியபோதே, பிரதமர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.
பிரதமர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
“இலங்கை அரசியலில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். இது தொடர்பான தீர்மானம் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களே ஆசியாவில் அரசியலுக்குள் நுழைந்துள்ளனர். இதனை மீறி பெண்கள் அரசியலுக்கு வருவது எமது நாட்டில் மிகக் குறைவானதாகவே காணப்பட்டது. பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளே இதற்குத் தடையாக காணப்பட்டன.
இந்த வரையறையை தாண்டி ஆசிய பெண்கள் அரசியலில் முன்னிலைக்கு வந்துள்ளனர். உலகின் முதலாவது பெண் பிரதமர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதல் பெண் ஜனாதிபதி ஆகியோர் எமது நாட்டில் தோன்றினார்கள்.
அயல் நாடான இந்தியாவில் பெண் பிரதமர் உருவெடுத்தார். ஜனாதிபதி உருவாகினார். பங்களாதேஷில் 2 பெண் பிரதமர்கள் உருவானார்கள்.
ஆனால் எமது நாட்டில் சமூக சூழல் மற்றும் தேர்தல் முறைமை காரணமாக பெண்கள் அரசியலில் முன்னோக்கி வர முடியாதுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஐ.தே.கட்சி பல காலங்களாக ஆழமாக ஆராய்ந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க இவ்விடயம் தொடர்பில் பாரிய பங்களிப்பை வழங்கினார்.
பல்வேறு பெண்கள் அமைப்புக்களுடன் செயற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற் கொண்டார்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் அமைப்பின் மூலம் சுதர்ஷனி பெர்ணாந்துபுள்ளே எம்.பி.யும் பங்களிப்பை வழங்கினார். 2013 ஆகஸ்ட் 7 ஆம் திகதி பிரேரணையொன்றை உள்ளூராட்சி தேர்தல் திருத்தத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கில் ரோஸி சேனாநாயக்க எம்.பி. முன்வைத்தார்.
ஜனவரி புரட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களும் இதனை வலியுறுத்துகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் இதை நிறைவேற்ற உறுதிமொழி வழங்கினோம். இது தொடர்பாக எமது புதிய ஆட்சி சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி., தமிழ் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. பாராளுமன்றத்திலும் உள்ளூ ராட்சி சபைகளிலும் பெண்களின் பிரதி நிதித்துவத்தை 25 வீதம் அதிகரிக்க நடவ டிக்கை எடுக்கப்படும்.
தற்போது இந்த சவாலை வெற்றிபெற எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” என்றார்.