புதிய தேர்தல் முறைமையினால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக் கூடாது; ரஹ்மத் மன்சூர்

🕔 December 10, 2015

Rahmath Mansoor - 022
ல்லை மீள்நிர்ணயம் மற்றும் புதிய தேர்தல் முறை ஆகியவை அமுல்படுத்தப்படும்போது, உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை காலமும் காணப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடாது என்றும், அந்நிலைமை உறுதி செய்யப்படவேண்டுமென்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளரும், அந்தக் கட்சியின் உச்சபீட  உறுப்பினருமான ரஹுமத் மன்சூர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் 2012ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்ளூர் அதி­கார சபைகள் தேர்­தல்கள் திருத்தச் சட்­டத்தின் படி, வட்­டார முறையும் விகிதாசார முறையும் கலந்ததாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, எல்லை நிர்­ண­யங்கள் தொடர்­பான முறைப்­பா­டுகள் தற்போது அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐவர் கொண்ட குழு­வினால் ஆரா­யப்­பட்டும் வருகின்றன.

இவ்வாறான நிலையில் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம் சமுகத்தின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவங்கள் பாதிப்படையாத வகையில் மறுசீரமைப்புக்கள் அமைய வேண்டும்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள், தற்போது வரையில் முழுமையாக மீளக்குடியேற்றம் செய்யப்படாத நிலைமையில் உள்ளார்கள். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் 25 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், நிறைவேறாமலேயே உள்ளது.

அதேபோன்று திருகோணமலையில் தோப்பூர், குச்சவெளி, கிண்ணியா, புல்மோட்டை மற்றும் அரிசிமலை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களின் குடியேற்றம் நிறைவு செய்யப்படவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்தினர் கையகப்படுத்திய பல நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகள் மீளக் கையளிக்கப்படாதிருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் எல்லை நிர்ணயம் தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த விவகாரம் தொடர்பிலும், இரு சமுகத்தினரும் பாதிப்படையாது தீர்வு எட்டப்படவேண்டும்.

கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் முஸ்லிம் சமுகத்தில் மூன்றிலிரண்டு பகுதியினர் பரந்து வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அவர்களின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யவேண்டியது மிக முக்கியமானதாகும்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல், வட்டார மற்றும் விகிதாரசார முறையில்  நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களின் தேசிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவர் ரஊப் ஹக்கீமும் அரசாங்கத்துடன் உரிய அணுகுமுறைகளை மேற்கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்ய வேண்டும் எனக் கோருகின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்