கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை

🕔 December 2, 2015
Gotta - 368
மு
ன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் என்று, ‘பெவிதி ஹன்ட’ என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

‘எவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்ய ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களின் தேவைக்கு அமைய, ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் மோசடிகள் ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்திய ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அவற்றை நிரூபிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமையினால், இவ்வாறு அநீதியாக கோட்டா உள்ளிட்டவர்களை கைது செய்ய முயற்சிக்கப்படுகின்றது.

முன்னைய அரசாங்க அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இதனை விளங்கிக் கொண்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏதேனும் ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி படையினரையும் ஏனைய அதிகாரிகளையும் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

சட்டமா அதிபர் யுவான்ஜித் விஜேதிலக்க, சட்டம் ஒழுங்கு முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உள்ளிட்டவர்கள் எவன்ட்கார்ட் தொடர்பில் வழக்குத் தொடர முடியாது என தெளிவுபடுத்தியிருந்தனர்.

எனினும் பயங்கரவாத தடைச் சட்டம், ஆயுத சட்டம் மற்றும் நிதி மோசடி சட்டத்தின் கீழ் அவன்ட் கார்ட் நிறுவனத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோட்டாவும் அவரின் மேலதிக செயலாளரும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை, எவன்ட் கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயற்பட்டுள்ளனர்.

பயங்கரவாதம் நிலவிய காலத்தில் கால்களுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டு அஞ்சியிருந்தவர்கள் இன்று சிங்கங்களைப் போன்று சீறத் தொடங்கியுள்ளனர்.

அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்கு, இவ்வாறு எவன்ட் கார்ட் சம்பவம் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு அரசாங்கம் முட்டாள்தனமாக தீமானித்தால், வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப்படும்’.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்